ஆணையம் சொல்வது ஒன்று; அதிகாரிகள் செய்வது இன்னொன்று; குளறுபடியால் அம்பலமாகும் ஓட்டு!

12


இதுவரை நான் வசித்த டில்லியில் ஓட்டளித்து வந்தேன். டில்லியில் தேர்தல் ஆணையத்தின் செய்திகளை சேகரித்து டிவியில் வழங்கிய எனக்கு தமிழகத்தில் ஓட்டளிப்பது ஒரு புதிய அனுபவம். இதற்கான நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருந்தது. முதலில் டில்லியிலிருந்து நான் வசிக்கும் இடத்திற்கு வாக்காளர் அட்டையை மாற்றினேன்.


அதற்கு உண்டான படிவம் 8ஐ ஆன் லைனில் பூர்த்தி செய்து அனுப்பினேன். பிறகு டில்லியில் ஆணைய நண்பருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். உடனே சென்னையிலிருந்து ஒரு அதிகாரி பேசினார். 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை என் தொகுதிக்கு மாற்றப்பட்டது.

அட்டை கிடைக்கவில்லை




சுவாமி வரம் கொடுத்தாலும் பூஜாரி வரம் கொடுக்க மாட்டார் என்பது போல என் வாக்காளர் அடையாள அட்டை மாற்றப்பட்டாலும் அது கைக்கு வரவில்லை. இது குறித்து அதிகாரியிடம் பேசினேன். 'புதிய வாக்காளர்களின் அட்டைகளை பிரிண்ட் செய்ய அனுப்பிவிட்டோம், விரைவில் கிடைத்துவிடும்' என்றார்.


தேர்தல் நெருங்க நெருங்க அட்டை வருகிற மாதிரி தெரியவில்லை. மறுபடியும் அதிகாரியிடம் பேச, 'டிஜிட்டல் மூலமாக உங்கள் வாக்காளர் அட்டையை டவுண்லோட் செய்துகொள்ளலாம்' என்றார். அப்படியே செய்துவிட்டேன். இதற்கிடையே, 'புதிய வாக்காளர் அட்டைகள் பிரிண்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டன.


தபாலில் கிடைக்கும்' என தகவல் வந்தது. ' அப்பாடா' என சந்தோஷப்பட்டேன். தபால்காரர் எப்போது வருவார் என தவமிருந்தேன். ஒரு நாள் அவரை வழியில் பார்த்தேன். நிறைய தேர்தல் வாக்காளர் அட்டைகளை அதற்கு சொந்தமானவர்களுக்கு கொடுக்க தபால்காரர் வைத்திருந்தார்.


ஆனால் என்னுடையது அதில் இல்லை. இப்படியே ஒரு வாரம் போனது. இனிமேல் தபால்காரரை நம்பி பயனில்லை. என் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டேன். இதைக்காட்டினால் போதும் வாக்களிக்கலாம். காலை 7.10 மணிக்கே ஓட்டுச்சாவடிக்கு வந்துவிட்டேன்.

மொபைல்போன்




டில்லியில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் போலீஸ் செக்கிங் உண்டு. விமான நிலையத்தில் செக் செய்வது போல முழுவதுமாக செக்கிங் நடக்கும். அதே போல தமிழகத்தில் என் ஓட்டுச்சாவடியிலும் இருக்கும் என்கிற நினைப்பில் சென்றேன். போலீசார் நிறைய பேர் இருந்தனர்.


ஆனால் எந்த செக்கிங்கும் கிடையாது. தமிழக மக்கள் மீது ஆணையத்திற்கு அபார நம்பிக்கை. ஓட்டுச்சாவடிக்கு மொபைல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என உத்தரவு. மொபைல் போன்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தினமும் டிவிக்கள் அலறிக்கொண்டிருந்தன. இதனால் என் மொபைல்போனை எடுத்து சென்றிருந்தேன்.


'மொபைல்போனை எங்கே வைப்பது' என ஓட்டுச்சாவடி ஊழியர் ஒருவரிடம் கேட்டேன். 'பாக்கெட்டில்தான்' என கிண்டலாக சொன்னார். பிறகுதான் தெரிந்தது, மொபைல் போன் வைக்க எந்த ஏற்பாடும் அந்த ஓட்டுச்சாவடியில் செய்யவில்லை என்பது. நான் ஓட்டளித்தது நகரில் இருந்து சற்று வெளியே இருக்கும் பகுதி.


கார்ப்பரேஷனில் அடங்கும் என்றாலும் ஏறக்குறைய ஒரு கிராமம் போலத்தான். பூத் ஏஜெண்ட் ஒருவர் சொன்னார் .- “மொபைல் போனை சட்டை பாக்கெட்டில் வைக்க வேண்டாம். பேண்ட் பாக்கெட்டில் சைலண்ட் மோடில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு செக்கிங் எதுவும் கிடையாது... எந்த பிரச்னையும் வராது” என்றார்.


ஓட்டளிக்க வரிசையில் நின்றிருந்தவர்கள் அனைவருமே மொபைல் போன் வைத்திருந்தனர். கையில் துப்பாக்கியோடு நின்றிருந்த பக்கத்து மாநில போலீஸ்காரரிடம் இது குறித்து கேட்டேன். 'யாராவது புகார் அளித்தால்தான் பிரச்னை... மொபைல் போனை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள்” என அட்வைஸ் தந்தார். மொபைல் போனை ஆப் செய்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.

திருவிழா கூட்டம்




ஜனநாயக திருவிழா என அழைப்பது முற்றிலும் சரிதான். நான் ஓட்டளித்த பள்ளியில் பல ஓட்டுச்சாவடிகள். ஒவ்வொன்றிலும் பெரிய வரிசை. அதிலும் பெண்கள் வரிசை அனுமார் வால் போல இருந்தது. ஓட்டுச்சாவடியில் வீல் சேரில் வருபவர்களுக்கு வசதி செய்யப்பட்டிருந்தது.


ஒரு சிலர் இப்படி வந்து வாக்களித்தைப் பார்த்தேன். குடிக்க தண்ணீரும், பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சில பெண்கள் கையில் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்களும் பொறுமையாக வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பட்டன் அழுத்த தெரியவில்லை




ஒரு வயதான பெண்மணி மறைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஓட்டளிக்க சென்றார். 'பட்டனை அழுத்துங்க' என்றார், தடுப்பிற்கு வெளியே அமர்ந்திருந்த அதிகாரி.


“பட்டன் அழுத்திவிட்டேன்,'' என்றார், அந்த பெண். “பீப் சத்தம் வரவில்லையே, சரியாக அழுத்துங்கள்,” என்றார், அதிகாரி. “நீல நிற பட்டனை அழுத்துங்கள்” என மறுபடியும் சொன்னார் அந்த அதிகாரி. ஆனால் அந்த வயதான பெண்மணிக்கு சரியாக புரியவில்லை.


பிறகு அந்த அதிகாரியே தடுப்பிற்கு உள்ளே சென்று, 'இப்படி பட்டனை அழுத்துங்கள்' என சொன்னார். பிறகு அந்த பெண்மணி அதிகாரி முன்னிலையிலேயே பட்டனை அழுத்த பீப் சத்தம் கேட்டது. ''நீங்கள் இருக்கும் போதே அந்த அம்மா பட்டனை அழுத்திவிட்டாரே, இது தவறு இல்லையா,'' என்றேன், அதிகாரியிடம்.


“ என்ன செய்வது சார்…இப்படி பலர் இருக்கின்றனர்” என வருத்தமாக சொன்னார். என்னதான் டிவியில் தினமும் எப்படி வாக்களிப்பது என காட்டினாலும் அது வயதான மக்கள் வரை சென்று சேரவில்லை என்பதுதான் நிதர்சனம். இதை தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும்.

இன்னொரு பிரச்னை



வாக்காளர் அடையாள அட்டையின் பிரிண்ட் அவுட்டை காட்டினேன். பட்டியலில் என் பெயரை டிக் அடித்துவிட்டு இடது கை ஆட்காட்டி விரலில் மை தடவினார் ஒரு பெண்மணி. தடுப்பிற்குள் சென்று பட்டனை அழுத்தினேன். பீப் சத்தம் கேட்டது. பக்கத்திலிருந்து விவிபேட்டில் நான் யாருக்கு வாக்களித்தேன் என்பது ஒரு சிறிய பிரிண்ட் அவுட்டாக வந்து பிறகு அந்த விவிபேட்டிற்குள் சென்றுவிட்டது. 'வெளியே வாங்க, அடுத்தவர் வாக்களிக்க வேண்டும்' என்றார் பக்கத்தில் அமர்ந்திருந்த அதிகாரி.



ஆனால் நான் யாருக்கு வாக்களித்தேனோ அவருடைய பட்டனுக்கு எதிரே உள்ள சிகப்பு லைட் மினுத்துக்கொண்டிருந்தது, அது மறைய 8 வினாடிகள் ஆயின. “லைட் போனதும்தான் நான் வெளியே வருவேன்” என சொல்லிவிட்டு லைட் மறைந்த பிறகு வெளியே வந்தேன். சிகப்பு லைட் மறைவதற்குள் அடுத்தவர் தடுப்பிற்குள் சென்றால், முன்னால் சென்றவர் யாருக்கு ஓட்டளித்தார் என்பதை அந்த சிணுங்கும் சிகப்பு லைட்டைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதிகாரிகள் இதைக் கண்டு கொள்ளாமல் அடுத்த வாக்காளரை தடுப்பிற்குள் அனுப்பிவிடுகின்றனர். இதையும் தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்.

- அ.வைத்தியநாதன்

Latest Tamil News
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

தொடர்புக்கு: mailto:vaithi@dinamalar.in

Advertisement