விஜயும் என்னைப்போல தான்; ஓட்டு போட்ட பிறகு அண்ணாமலை சொன்ன விஷயம்

24

கோவை: வெள்ளைச்சட்டை, காக்கி பேன்ட் அணிந்து வந்து ஓட்டு போட்டது ஏன்? என்பது குறித்து பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபை தேர்தலையொட்டி, கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் அவர் தனது ஓட்டினை செலுத்தினார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; தமிழகத்தில் காலையில் இருந்து எல்ரோரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் தமிழ் சொந்தங்கள் பெரும் எண்ணிக்கையில் நின்று கொண்டிருக்கிறார்கள். 5.60 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். 1.30 கோடி பேர் 29 வயதுக்கு கீழுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். 17 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் இருக்கின்றனர். அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். தமிழகத்தில் நல்ல மாற்றம் வரும் என்று உறுதியாக நம்புகிறேன். மதியம் வெயில் இருந்தாலும் குடையுடன் வாருங்கள். மனசாட்சிப்படி மக்கள் வாக்களிக்க வேண்டும்

மாற்றுக்கருத்து இல்லை



செய்தித்தாளில் பார்த்தவரைக்கும் 84 ஆயிரம் போலீசார் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் எப்போதும் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்படும். மக்கள் அமைதியான முறையில் வந்து ஓட்டளித்து விட்டு செல்வார்கள். பெரியளவில் வன்முறைகள் இருக்காது.

அதேநேரத்தில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கரூரில் அரைகிராம் தங்கம், வெள்ளி, கோவையில் பணம் கொடுத்தது எல்லாம் தேர்தல் பணிகளை வெகுவாக பாதித்துள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மனசாட்சிப்படி



சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லக்கூடிய பஸ் வசதிகள் ரொம்ப குறைவாக இருக்கிறது. தனியார் மற்றும் அரசு பஸ்கள் குறைவாக இருக்கிறது. நேற்று இரவு சிங்காநல்லூரில் இருந்து செல்லவிருந்த பஸ்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததாக நிறைய பேர் புகார்கள் அளித்திருந்தனர். தமிழகத்தில் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாமோ? என்பது என்னுடைய கருத்து.

போக்குவரத்துத்துறையை கையில் எடுத்திருக்க வேண்டும். வழிகாட்டுமுறைகளை வெளியிட்டிருக்க வேண்டும். போதிய பஸ் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு நேற்று இரவு சென்னையில் இருந்து கிளம்பிய பஸ், இன்று காலையில் தான் ராமநாதபுரமே சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு காலையில் தாமதமாக பஸ்ஸை எடுத்துள்ளனர். எங்களின் கட்சியைச் சார்ந்த வாக்காளர்கள், நடுநிலையாக இருப்பவர்கள், இளைஞர்கள் கூட இதனை பெரிய புகாராக சொல்லி வருகின்றனர். தேர்தல் ஆணையம் இன்னும் கொஞ்சம் கட்டுப்பாட்டில் எடுத்து, அனைவரும் ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. காரணம், வீடு வீட்டு நான்கு பேர் நடந்து சென்று ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்கிறார்கள். கரூரில் அரைகிராம் தங்கக்காசை வாக்காளர்களுக்கு தைரியாமாக கொண்டு போய் கொடுக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரே நாளில் வரவில்லை. பணம் எங்கே இருந்து கொண்டு வரப்பட்டு, பதுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு தங்கங்கள் வாங்கியிருக்கிறார்கள். சாதாரண பொதுமக்கள் ரூ.50000 எடுத்துச் சென்றால், எவ்வளவு பெரிய நடைமுறையில் சிக்கி வெளியே வருகிறோம். தமிழகத்தில் இவ்வளவு பணம், மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம் என்று அதிகாரிகள் சொன்னாலும்கூட, அதில் அரசியல்வாதிகளின் தலையீடு எவ்வளவு? இன்றைக்கு நாம் புகார் அளிப்பது பிரயோஜனம் இல்லை. கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் போராட்டம் நடத்தினார். வாக்காளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என நம்புகிறோம்.

வாக்குசதவீதம் உயரும்



எஸ்ஐஆர் பணிகளால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஓட்டுச்சதவீதம் 2 முதல் 2.5 சதவீதம் வரையில் உயரும். 2.5 சதவீதத்திற்கு மேல் ஓட்டுப்பதிவானால், அதிகமான வாக்காளர்கள் வந்திருப்பதாக அர்த்தம். அநாவசியமாக வாக்காளர்கள் பெயர் நீக்கப்படவில்லை. நடுநிலையாக தான் செயல்பட்டார்கள்.

இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தலை விட அடுத்தகட்டத்திற்கு சென்று விட்டது. ஏனெனில், வாக்காளர்களுக்கு அரைகிராம் தங்கம், ரூ.5,000 ரொக்கம் தருவதை பார்த்ததில்லை. அது எல்லாம் தாண்டி நடந்துள்ளது. இது தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பாடமாக பார்க்கிறேன். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பே, மாநிலத்தை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும், வங்கி பரிமாற்றங்களை கண்காணிக்க வேண்டும். ஆனால், எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரிகிறது, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, பதுக்க வேண்டியதை பதுக்கி விடுகிறார்கள்.

டிரஸ் கோட்



திமுக பல இடங்களில் இன்று சாப்ட் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நான் போலீஸில் இருந்ததால் காக்கி பேன்ட், அரசியலுக்கு வந்ததுக்கு பிறகு வெள்ளை சட்டை அணிந்து வருகிறேன். நீங்கள் முந்தை நிகழ்வுகளை பார்த்தால் தெரியும். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தவெக தலைவர் விஜயும் இதே உடை பாணியை கடைபிடிக்கின்றனர்.

நான் என்னுடய போலீஸ் பணியில் இருந்து வெளியே வந்ததற்காக, காக்கி எப்போதும் என்னுடன் இருப்பதற்காக பெரும்பாலும் இதுபோன்ற உடையை அணிவேன். புதிதாக என்னை இந்தப் பக்கம், அந்தப் பக்கம் சேர்த்து விடாதீர்கள். நான் எப்போதும், ஒரு பக்கம் தான், அதுவும் சரியான பக்கத்தில் இருக்கிறேன்.

பணமழை ஜெயிக்காது



இவ்வளவு பணம் கொடுத்து கோவை தெற்கு தொகுதியில் நடைபெறும் தேர்தல் நியாயமாக இருக்குமா? என்ற அம்மன் அர்ஜூனனின் கருத்தில் நானும் உடன்படுகிறேன். பணமழை ஜெயிக்காது, ஜனநாயகம் ஜெயிக்கும். அரசு பொறுப்பில் இருக்கும் உள்ளூர் அதிகாரிகள் தான் தேர்தல் பணிகளை செய்கின்றனர். அவர்களை குறை சொல்லவில்லை. ஆனால், தேர்தல் ஆணையம் இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடுகளையும், கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்தி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement