மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தால் பழைய தி.மு.க.,வை பார்ப்பீர்கள்!: ஸ்டாலின் எச்சரிக்கை

136

சென்னை: 'தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை கொண்டு வந்தால், பழைய தி.மு.க.,வை பார்ப்பீர்கள்' என, மத்திய அரசுக்கு, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சட்டமசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை, 543ல் இருந்து 850 ஆக அதிகரிக்கக் கூடும் .

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட, 'வீடியோ' பதிவு: தமிழகத்தின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்தை பற்றிச் சொல்லவும்,மத்திய பா.ஜ., அரசிற்கு எச்சரிக்கை விடுக்கவும் இதை வெளியிடுகிறேன்.

விழிப்புணர்வு



பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. கூடுகிறது என்று சொல்வதை விட தமிழகம், மேற்கு வங்க தேர்தலுக்கு இடையில் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது. தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் சட்ட திருத்தத்தை, இந்த தொடரில் மேற்கொள்ள உள்ளனர்.

முதலில் இருந்தே இதுபற்றி எச்சரித்தோம். இந்தியா முழுதும் இருந்து, இதனால் பாதிப்படைய உள்ள மாநில முதல்வர்களை சென்னைக்கு அழைத்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்தினோம்.

'மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்கள்; அளவாக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்; குடும்ப கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்' என, மத்திய அரசு சொன்னதை எல்லாம் நாங்கள் கேட்டோம். சொன்னதை ஒழுங்காக செய்ததற்காகவே எங்களுக்கு தண்டனை தருவீர்களா?

ஜனநாயக விரோதம்



தென் மாநிலங்கள் பாதிப்படையாது பிரதமர் உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டோம்; பதில் இல்லை. பிரதமரை நேரில் சந்தித்து முறையிட நேரம் கேட்டோம்; கிடைக்கவில்லை. நாம் சொன்ன எதையும் அவர்கள் காதில் வாங்காமல், எந்த மாநிலத்தோடும், எந்த ஆலோசனையும் நடத்தாமல், அவர்கள் இஷ்டத்துக்கு செய்ய பார்க்கின்றனர்.இப்படி அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய நினைப்பது, பா.ஜ., அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்.

மறுவரையறையை எப்படி செய்யப் போகின்றனர் என்று தெரியவில்லை. சட்ட திருத்தம் என்ன என்பது பற்றி, இதுவரை எதுவுமே சொல்லவில்லை. இப்படி மறைத்து மறைத்து செய்கின்றனர் என்றால், கண்டிப்பாக ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது.

தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். மத்திய பா.ஜ. அரசிற்கும், பிரதமர் மோடிக்கும் இந்த நேரத்தில் முக்கியமாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நடக்க இருக்கும் பார்லிமென்ட் கூட்டத்தில், எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வர்.

சும்மா இருக்க மாட்டோம்



தமிழகத்தை பாதிப்பது போன்றோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, ஏதாவது நடந்தால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். தமிழகம் ஸ்தம்பிக்கும்; தன் எதிர்ப்பை கடுமையாக காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். என்தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

இது தேர்தல் காலம் என்பதால், எங்கள் கவனம் அதில்தான் இருக்கும்; நாம், 'சைலைன்ட்' ஆக தொகுதி மறுவரையறை செய்து விடலாம் என நினைக்கவே நினைக்காதீர்கள். கடந்த 1950 மற்றும்1960ம் ஆண்டுகளில் பார்த்த பழைய தி.மு.க.,வை, இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும். என்ன இவன் மிரட்டுகிறான் என்று நினைக்காதீர்கள்; நான் எச்சரிக்கிறேன்.

கொள்கைதான் முக்கியம்



நீங்கள் அதை மிரட்டல் என்று நினைத்தாலும், எங்களுக்கு கவலையில்லை. தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை இது. தேர்தல், ஆட்சி அதிகாரம் இது எல்லாம் எங்களுக்கு இரண்டாம்பட்சம்தான். நாங்கள் சுயமரியாதைகாரர்கள்; எங்களுக்கு கொள்கைதான் முக்கியம்.

தமிழகத்திற்கு தவறிழைத்து விட்டு, வழக்கம்போல சும்மா கடந்து செல்ல நினைத்தால் நடப்பதே வேறு. தமிழகம் பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து விடுவோம். பிரதமர் மோடிக்கு மீண்டும் சொல்கிறேன்; இது, தமிழகத்தில் இருந்து உங்களை நோக்கி விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்லார்.

@block_G@முதல்வர் பொய் சொல்கிறார்: அண்ணாமலை காட்டம்

அண்ணாமலை கூறியதாவது: ஸ்டாலின் கருத்துக்கள் ஏற்புடையவை அல்ல. 'மோடிக்கு கடைசி எச்சரிக்கை' என்று கூறியிருக்கிறார். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்பது தவறு. ஒவ்வொரு மாநிலத்திற்கும், 50 சதவீத தொகுதிகள் உயர்த்தப்படும் என்று, முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.

அப்படி இருக்கும்போது, தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கை, 39ல் இருந்து, 59 வரை உயர வாய்ப்புள்ளது. கேரளாவில், 20ல் இருந்து, 30 எம்.பி.க்களாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அப்பாவி தொண்டர்களை தீக்குளிக்க வைத்து, ஆண்டுக்கு ஒருமுறை மாலை போடுவதை, தி.மு.க., ஏமாற்று வேலையாக செய்கிறது. block_G

Advertisement