'பே அண்டு பார்க்கிங்' திட்டம் ஜி.பி.ஏ., திட்டத்துக்கு எதிர்ப்பு
பெங்களூரு: வாகன பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காண, ஜெயநகரின் 42 சாலைகளில் 'பே அண்ட் பார்க்கிங்' வசதி செய்ய, ஜி.பி.ஏ., திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே, வாகன பயணியருக்கு பார்க்கிங் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. கண்ட, கண்ட இடங்களில் விதிமீறலாக வாகனங்களை நிறுத்துகின்றனர். இது மக்களின் நடமாட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், விபத்துக்கும் காரணமாகிறது.
விதிமீறலாக வாகனங்கள் நிறுத்துவதை கட்டுப்படுத்தவும், பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காணவும், பெங்களூரின் பல்வேறு சாலைகளில், பே அண்ட் பார்க்கிங் வசதி செய்ய, ஜி.பி.ஏ., திட்டமிட்டது. ஏற்கனவே பல சாலைகளில் பே அண்ட் பார்க்கிங் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் பல சாலைகளுக்கு, திட்டம் விஸ்தரிக்கப்படுகிறது.
ஜெயநகரின் 42 சாலைகள், 'பே அண்ட் பார்க்கிங்' மண்டலங்களாக, அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் வாகனத்தை நிறுத்த வேண்டுமானால், நிர்ணயித்த கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். இதன் மூலம் தன் வருவாயை அதிகரிப்பதும், ஜி.பி.ஏ.,வின் எண்ணமாகும்.
ஜி.பி.ஏ.,வின் இந்த திட்டத்துக்கு, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாகனம் வாங்கும் போதே, சாலை வரி உட்பட லட்சக்கணக்கான ரூபாய் செலுத்துகிறோம். இப்போது சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கும், கட்டணம் வசூலிப்பது தங்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் இயங்கும் லட்சக்கணக்கான வாகனங்களுக்கு, பார்க்கிங் வசதி செய்து கொடுப்பது, அரசின் கடமையாகும். கட்டணம் பெயரில் மக்களுக்கு தொல்லை கொடுப்பது சரியா என, கேள்வி எழுப்புகின்றனர்.