பெரம்பூரில் தி.மு.க.,வினர் பண பட்டுவாடா: பா.ம.க., திலகபாமா குற்றச்சாட்டு

7

பெரம்பூர்: தி.மு.க., நிர்வாகிகள், அதிகாரிகள் ஆதரவுடன் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக, பெரம்பூர் தொகுதி பா.ம.க., வேட்பாளர் திலகபாமா பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார்.

சென்னை மாநகராட்சி 44வது வார்டு உட்பட்ட பகுதியில், கார் ஒன்றில் பதுக்கி வைத்து பணப்பட்டுவாடா நடப்பதாக பெரம்பூர் தொகுதி பா.ம.க., வேட்பாளர் திலகபாமாவிற்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், அப்பகுதி தி.மு.க., கவுன்சிலரின் வீட்டில் 5 கோடி ரூபாய் அளவிற்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

ஆனால், அதிகாரிகள் மற்றும் போலீசார் தாமதமாக வந்ததோடு, மெத்தனமாக சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், தி.மு.க.,வினர் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த திலகபாமா, 'அதிகாரிகள் வந்த தகவல் தி.மு.க.,வினருக்கு தெரிந்தது எப்படி; பட்டுவாடாவிற்கு வைக்கப்பட்டிருந்த பணம், தகவல் தெரிவித்தும் எப்படி மாயமானது; சம்பவ நேரத்தில் பொறுப்பான தேர்தல் அதிகாரி இல்லாமல், ஒரு ஊழியர் மட்டுமே பதில் அளித்தது ஏன்' என, அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

பின், செய்தியாளர்களிடம் திலகபாமா பேசுகையில், ''தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாகவும், இது ஜனநாயகத்தை பாதிக்கும். தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

இந்த நிலையில், நேற்று வியாசர்பாடி, பி.வி.நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தின் இடையே, சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement