கடம்பத்துார், பூண்டி ஒன்றியங்களில் சாலை, பஸ் வசதி ஏற்படுத்தப்படும் த.வெ.க., வேட்பாளர் அருண்குமார் உறுதி

திருவள்ளூர்: ''கடம்பத்துார், பூண்டி ஒன்றியங்களில் சாலைகள் அமைத்து, பேருந்து வசதி ஏற்படுத்தப்படும்,'' என, த.வெ.க., வேட்பாளர் அருண்குமார் பிரசாரத்தில் உறுதியளித்தார்.

திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், த.வெ.க., சார்பில் டாக்டர் அருண்குமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று, த.வெ.க., தொண்டர்களுடன், பூண்டி ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

எல்லப்பநாயுடுபேட்டை, காரணி நிஜாம்பட்டு, ராமஞ்சேரி, சென்றாயன்பாளையம், அல்லிகுழி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

அவரை, அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது, காரணி நிஜாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், 'தங்களுக்கு குப்பம்மாசத்திரம் செல்லவதற்கு, 2 கி.மீ.,க்கு சாலை வசதி இல்லாததால், கனகம்மாசத்திரம் சென்று, அங்கிருந்து திருவள்ளூர், திருத்தணிக்கு செல்ல வேண்டியுள்ளது.

'மேலும், எங்கள் கிராமத்திற்கு இதுவரை பேருந்து வசதி இல்லை. கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றனர்.

அப்போது, வேட்பாளர் அருண்குமார் பேசியதாவது:

திருவள்ளூர் தொகுதியில் உள்ள பூண்டி, கடம்பத்துார் ஒன்றியங்களில், ஏராளமான கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில், போதிய சாலை மற்றும் பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது.

நான் வெற்றி பெற்றால், கிராமங்களில் சாலை வசதி மேம்படுத்தி, போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு, கிராமங்களில் விளையாட்டு திடல் ஏற்படுத்தி, அவர்களின் விளையாட்டு திறன் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவருடன், த.வெ.க., பூண்டி மேற்கு ஒன்றிய செயலர் பிரதாப், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள் சென்றனர்.

Advertisement