ஸ்மார்ட் மீட்டரை அகற்றக்கோரி உ.பி.,யில் நுாதன போராட்டம்

பண்டா: உத்தர பிரதேசத்தில், வீட்டில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டரை அகற்றக்கோரி, மணமகன் தன் திருமண ஊர்வலத்துடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உ.பி.,யின் பண்டா மாவட்டத்தில் உள்ள உஜ்ரேஹட்டா பகுதியைச் சேர்ந்தவர் குல்தீப் குமார்.

இவரது வீட்டில் சமீபத்தில் மின் வாரிய அதிகாரிகள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதால், அதன்பின் அதிக கட்டணம் வருவதாக புகார் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே, குல்தீப் குமாருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை அவரது திருமண ஊர்வலம் நடைபெற்ற போது, அதிக தொகையுடன் கூடிய மின் கட்டண ரசீது வழங்கப்பட்டதாகவும், கட்டணம் செலுத்தவில்லை எனில் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் மின் வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குல்தீப் குமார், தன் உறவினர்கள், நண்பர்கள் என, 100க்கும் மேற்பட்டோருடன் திருமண ஊர்வலம் மேற்கொண்டார்.

பண்டா மாவட்டத்தின் அசோக் லோட் சந்திப்பு அருகே சென்றபோது, அங்கிருந்த கலெக்டர் அலுவலகத்திற்குள் மேளதாளங்களுடன் திடீரென ஊர்வலம் நுழைந்தது.

அதன்பின் மாநில அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், குல்தீப் குமாரின் வீட்டில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டரை அகற்றிவிட்டு, பழைய மீட்டரை பொருத்தும்படி முழக்கமிட்டதுடன், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதை தொடர்ந்து, திருமண ஊர்வலம் நடைபெற்றது.

இதற்கிடையே, ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான பிரச்னைகளை போர்க்கால அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஏ.கே.சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'ஸ்மார்ட் மீட்டர் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு அல்லது 200 ரூபாய் வரை மின் வினியோகம் தடைபடாது என்ற ஒரு விதிமுறை செயல் படுத்தப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement