'டான்டீ' தொழிலாளர்களுக்கு குத்தகை நிலம் போராடி வாங்கி தருவேன்: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

கூடலுார் : கூடலுார் அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன், அரசு தேயிலை 'டான்டீ' தொழிலாளர்களிடம் ஓட்டு சேகரித்து பேசியதாவது:

கூடலுார், குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் தாயகம் திரும்பிய ஆயிரக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்புக்காக, அரசு டான்டீ நிறுவனம் சார்பில் தேயிலை தோட்டங்கள் துவங்கப்பட்டது. பசுந்தேயிலை விலை வீழ்ச்சியை தொடர்ந்து, இங்குள்ள பல தேயிலை தொழிற்சாலைகள் பராமரிப்பின்றி மூடப்பட்டன.

இந்நிலையில், தேயிலை தோட்ட நிலங்களை வன நிலமாக மற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், திட்டத்தை கைவிடும் படி, அ.தி.மு.க., சார்பில் சட்டமன்றத்தில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர் கட்சி தலைவர் இ.பி.எஸ்., பேசினார்.

என்னை வெற்றி பெற செய்தால், டான்டீ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், குடும்பத்துக்கு தலா இரண்டு ஏக்கர் நிலத்தை நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்க, குடிசை மாற்று வாரியம் திட்டத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கும் அரசின் திட்டத்தை கைவிட்டு, வீட்டுமனை உடன் தனி வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று, தனியார் எஸ்டேட்டுகளில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர்கள், ஓய்வுக்கு பின் கிடைக்கும் குறைந்த பண பலன்கள் கிடைப்பதால், குடியிருக்க சொந்த வீடு வாங்க கூட முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கும் வீட்டுமனையுடன் கூடிய குடியிருப்பு கட்டி தர முயற்சி மேற்கொள்ளப்படும். எனவே, அ.தி.மு.க., ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement