உதயநிதி மீது தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., அவதுாறு புகார்

1


சென்னை: 'லாட்டரி விற்பனை குறித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், லால்குடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லீமா ரோஸ் புகார் அளித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் மனு:

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறேன். லால்குடியில், கடந்த 11ம் தேதி பிரசாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி, என் தனிப்பட்ட அரசியல் அடையாளத்தை, இழிவான பட்ட பெயரிட்டு பேசினார். வாக்காளர் மனங்களில், எனக்கு எதிரான எண்ணத்தை உருவாக்குவது, அவரது நோக்கமாக இருந்தது.

'நானும் என் குடும்பத்தினரும், மறைமுக நோக்கங்களுக்காக, பல அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள். தமிழகத்தில் லாட்டரி விற்பனையை மீண்டும் துவங்கி, மக்களை சீரழிக்க எண்ணுகிறோம்' எனவும், உதயநிதி கூறியுள்ளார்.

என் கணவர் மார்ட்டின், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளார். கேரளம், சிக்கிம், கோவா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட, 13 மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டப்பூர்வமாக நடக்கிறது. என் கணவரின் லாட்டரி விற்பனை, அந்தந்த மாநிலங்களில், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றி நடக்கிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை, மீண்டும் தொடங்குவது என் நோக்கம் என்பதாக, உதயநிதி பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அவதுாறு பிரசாரம், என்னுடன் நின்று விடாமல், தமிழகம் தழுவிய பாதிப்பை ஏற்படுத்தும். எனக்கும், என் குடும்பத்திற்கும் எதிரான அவதுாறான கருத்துகளை வெளியிட, உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்ற புகாரை, லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும் தே.ஜ., கூட்டணியில் உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லசும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.

Advertisement