போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்

கோவை:சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சிங்காநல்லுார் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசியதாவது:

ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தே.ஜ., கூட்டணி ஏற்பட்டுள்ளது. தீய சக்தி தி.மு.க., இந்தியாவை உலகளவில் உயர்த்த, நாட்டை வழி நடத்தி வரும் பிரதமர் மோடியின் ஆதரவுடன் இந்த தேர்தலை சந்திக்கிறோம்.

ஐந்து ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் மக்கள் வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின்கட்டணம் பல மடங்கு உயர்வால் அவதிப்பட்டு வருகின்றனர். தி.மு.க., பொதுமக்களை ஏமாற்றும் வகையில் 525 பொய் வாக்குறுதிகளை கொடுத்தது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பின்னரும் கண்டுகொள்ளவில்லை. அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றனர்.

கொரோனா காலத்தில், உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த நர்ஸ்களை பணி நிரந்தரம் செய்வதாக கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த காலத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். எதிர்வரும் காலத்தில் வெற்றி பெற்று பல திட்டங்களை கொண்டு வருவோம்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பதவி ஏற்றவுடன் கோவைக்கு அதிசயம் நடக்கும். நம் பகுதியில் இருந்து மீண்டும் ஒரு மத்திய அமைச்சராக அண்ணாமலையை பிரதமர் மோடி நியமிப்பார்.

விடுபட்ட அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படும். தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுவதும் மிகவும் மோசமான போதை கலாசாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லுார் தொகுதியில், வசிக்கும் நம் குழந்தைகள், பெண்கள், கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய என் தலைமையில், தன்னார்வலர்களோடு, இணைந்து தனிக்குழு அமைக்கப்படும்.

போதை ஆசாமிகள், போதைப் பொருட்கள் விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் இல்லா பாதுகாப்பான சிங்காநல்லுார் தொகுதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement