'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'

போத்தனூர்:கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபரி கார்த்திகேயன் நேற்று வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சியில் செய்த மக்கள் நலத்திட்டங்கள், சாதனைகளை முன்னிறுத்தி ஓட்டு கேட்டு வந்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க.,வினர் இதுபோன்ற மக்கள் திட்டங்களை நிறைவேற்றினோம் என கூறி, ஓட்டு கேட்க முடியாது.

தமிழகத்தின் உரிமைகள், மக்கள் நலனை டில்லிக்கு அடகு வைத்தவர்கள். தங்கள் ஆட்சி, கட்சியை காப்பாற்ற நாட்டின் எதிர்காலத்தை விட்டுக் கொடுத்தவர்கள். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

நாட்டின் உரிமைகள், நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை காக்கும் தி.மு.க.,வுக்கே உங்கள் ஓட்டு என்ற முடிவை எடுங்கள். வளமான தமிழ்நாட்டுக்கு உறுதுணையாக இருங்கள். தற்போதைய எம்.எல்.ஏ. அமைச்சராக இருந்தவர். கட்சியில் மூத்த நிர்வாகி.

ஆனால் தொகுதியில் குடிநீர், மழை நீர் வடிகால், உட்கட்டமைப்பு பணிகள் கூட நிறைவேறாமல் உள்ளன. இந்நிலையை மாற்றவே உங்களில் ஒருவனாக ஓட்டு கேட்டு வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளலூர் நகர முன்னாள் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட கட்சி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement