கை கொடுக்குமா கும்பாபிஷேகம்?

'இனியும் சிறுபான்மையினரை மட்டும் நம்பி இருந்தால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து விட்டார் போலிருக்கிறது...' என, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தொடர்ச்சியாக, இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்ததால், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில், அடுத்தாண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதாக, பா.ஜ., தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

சிறுபான்மையினரின் ஓட்டுகளை வாங்குவதற்காக, அவர்கள் பிரச்னையில் மட்டுமே அகிலேஷ் யாதவ் கவனம் செலுத்துவதாகவும் பா.ஜ.,வினர் தொடர்ந்து கூறி வந்தனர். இதனால், பெரும்பான்மை ஹிந்துக்கள், பா.ஜ., பக்கம் சாய்ந்ததால், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் சமாஜ்வாதிக்கு தோல்வி கிடைத்தது.

இதனால் உஷாரான அகிலேஷ் யாதவ், தன் சொந்த ஊரான உ.பி.,யின் எடாவாவில், தன் வீட்டுக்கு அருகே, 50 கோடி ரூபாய் செலவில், மகாதேவ் கோவிலை பிரமாண்டமாக கட்டி, கும்பாபிஷேகமும் நடத்தி முடித்துள்ளார்.

ஹிந்துக்களின் கோபத்தை தணிப்பதற்காக, அகிலேஷ் யாதவ் நடத்தி முடித்துள்ள கும்பாபிஷேகம், தேர்தலில் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement