மது பாட்டிலில் ரூ.10 ஸ்டிக்கர் காணோமுங்க; தேர்தல் நேரம் என்பதால் தவிர்ப்பு

10


கோவை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கோவையில் உள்ள பெரும்பாலான 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ரூ.10 'ஸ்டிக்கர்' இன்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவது பேசுபொருளாக மாறியுள்ளது. 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள், காலி மதுபாட்டில்களை கொடுத்துவிட்டு ரூ.10 பெறும் திட்டம், இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர், அத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்புபடுத்தி விமர்சித்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அமைச்சருக்கு எதிரான பிரசாரத்தில் 'பத்து ரூபாய்' சமாச்சாரம் தவறாமல் இடம் பிடித்து விடுகிறது. இந்நிலையில், 'ரூ.10 ஸ்டிக்கர்' இல்லாமல் கோவையில் உள்ள பெரும்பாலான 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மது விற்பனை நடக்கிறது.



தேர்தல் சமயத்தில் ஸ்டிக்கர் ஒட்டினால், தி.மு.க., மீது அதிருப்தி ஏற்படுமோ என்ற எண்ணத்தில் இந்த ஸ்டிக்கர் தவிர்க்கப்படுவதாக, எதிர்க்கட்சியினர் கிண்டலாக கூறுகின்றனர். 'ஏற்கனவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இப்படியிருக்க பாட்டிலை திரும்ப பெற, 'க்யூ ஆர் கோடு' மற்றும் கடை எண் உடன் ரூ.10 'ஸ்டிக்கர்' ஒட்டி தரப்பட்டது. இதனால் கடைகளில் குடிமகன்கள் வாக்குவாதம், போலீசார் தாக்குவது போன்ற செயல்கள், அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.


கடந்த சில மாதங்களாக இந்த ஸ்டிக்கரை ராமநாதபுரம், காந்திபுரம், புலியகுளம், ஒண்டிப்புதுார் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காணவில்லை. புறநகர் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. தி.மு.க.,வினர் சிலரிடம் பேசியபோது, 'ஏற்கனவே 'பத்து ரூபா பாலாஜி'ன்னு எங்க வேட்பாளருக்கு பேரு வச்சிருக்காங்க.


எலக்ஷன் நேரத்துல அந்த பாட்டிலை மேடையில காட்டி எதிர்க்கட்சிக்காரங்க பேசுவாங்களோன்னு ஒரு பயம். அதான் ஸ்டிக்கர் ஒட்டுறதை அவாய்டு பண்ண சொல்லியிருக்கறதா தகவல்; எதுக்கு வீண் வம்பு' என்றனர்.'டாஸ்மாக்' அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சில கடைகளில் இந்த ஸ்டிக்கர் இல்லை. பெரும்பாலான கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டியே விற்கப்படுகிறது' என்று சமாளித்தனர்.

Advertisement