65 விவசாய சங்கங்கள் இணைந்து தி.மு.க.,வுக்கு எதிராக களப்பணி

29


பல்லடம்: ''தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களுக்காக, இந்த ஆட்சியை அகற்றுவதற்காக, 65க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து, தேர்தல் களப்பணி ஆற்றுகிறோம்,'' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறினார்.


திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி: கடந்த 2021 தேர்தலில், விவசாயிகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த தி.மு.க., அவர்களுக்கு அளித்த, 83 வாக்குறுதிகளில், 73 வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டது. விவசாயிகளுக்கு பெரிதாக பயன் தராத வெறும், 10 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, விவசாயிகளை வஞ்சித்துவிட்டது.


'விவசாயிகளின் ஒப்புதல் இன்றி, நிலம் எடுக்கப்படாது' என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின், இன்று, 40 சிப்காட் திட்டங்களுக்காக, 1.10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை, அடிமாட்டு விலைக்கு அபகரித்துள்ளார்.


மேலும், இனாம் நிலங்களின் மதிப்பை, 'பூஜ்ஜியம்' ஆக்கி, விவசாயிகளின் நில உரிமையை பறித்ததையே, ஒரு சாதனையாக இந்த அரசு கொண்டாடி வருகிறது. திருவண்ணாமலையில், விளை நிலங்களை காக்க, அமைதி வழியில் போராடிய விவசாயிகள் மீது, குண்டர் சட்டத்தை பாய்ச்சிய ஒரே அரசு தி.மு.க., தான்.


மேலும், தி.மு.க., மாநாட்டிற்காக, 5,000 லோடு மண், சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதை கண்டித்தவர்கள் மீதும், கறிக்கோழி கூலி உயர்வு கேட்டு போராடியவர்கள் மீதும், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது இந்த அரசு.


இதனால், தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற, 65-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், தமிழகம் முழுதும் தீவிரமாக தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement