ரூ.8,000 கூப்பன் மாதிரி வழங்கிய தி.மு.க.,வினர் போலீசில் ஒப்படைப்பு

சிவகங்கை: வாக்காளர்களுக்கு, 8,000 ரூபாய்க்கான கூப்பன் மாதிரிகளை வழங்கிய தி.மு.க.,வினரை பிடித்து, அ.தி.மு.க.,வினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில், தி.மு.க.,வினர் நேற்று வீடுதோறும், 8,000 ரூபாய்க்கான கூப்பனை வழங்கினர். அ.தி.மு.க., நகர செயலர் என்.எம்., ராஜா உட்பட நிர்வாகிகள், கூப்பன் வினியோகம் செய்த தி.மு.க.,வை சேர்ந்த முருகானந்தம், பாபுவை பிடித்து, சிவகங்கை தொகுதி தேர்தல் அலுவலர் ஜெபிகிரேசியாவிடம் புகார் அளித்து, கண்காணிப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

இருவரையும், ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து செல்லவில்லை. அவ்வழியே காரில் வந்த தி.மு.க., நகர செயலர் துரை ஆனந்த், இருவரையும், தன் காரில் அழைத்து சென்றார்.

இதையடுத்து, அ.தி.மு.க.-, - பா.ஜ.,வினர், 'நாங்கள் பிடித்து கொடுத்த இருவரையும், எப்படி விட்டீர்கள்?' என கேட்டு, நிலை கண்காணிப்பு குழு, இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினரும், சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் கூடினர். பின், முருகானந்தம், பாபு இருவரும், போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement