தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்

விருத்தாசலம்: தேர்தலை நேர்மையாக நியாயமாக நடத்தும் பொறுப்பும், கடமையும் உங்களுக்கு உள்ளது' பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆலோசனை வழங்கினார்.

2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ஜெயப்பிரியா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது.

இதனை, மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு, பேசிய தாவது:

ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர் 1, 2 மற்றும் 3 ஆகியோருக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடக்கிறது. விருத்தாசலம் தொகுதியில் 1,520 அலுவலர்கள், திட்டக்குடியில் 1,340, நெய்வேலி 1,228, பண்ருட்டி 1,484, கடலுார் 1,240, குறிஞ்சிப்பாடி 1,336, புவனகிரி 1,460, காட்டுமன்னார்கோவில் 1,396, சிதம்பரம் 1,432 உட்பட 12,436 அலுவலர்களுக்கு பயிற்சி நடக்கிறது.

மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு வரும், 22ம் தேதி நடக்கிறது. இதில், ஓட்டுப்பதிவுக்கு தேவையான தேர்தல் பொருட்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மண்டல அலுவலர்கள் ஒப்படைக்கும்போது பட்டியலில் உள்ளவாறு சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

பணியில் ஈடுபடுவோர் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், பகல் 12:00 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு சென்றடைய வேண்டும்.

மண்டல அலுவலரிடமிருந்து ஓட்டுப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள், பொருட்களை பெறும்போது பட்டியலை சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஓட்டுச்சாவடி மையத்தில் இயந்திரங்களை வைக்கும்போது போதிய வெளிச்சம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாதிரி ஓட்டுப்பதிவினை முகவர்கள் முன்னிலையில் காலை 5:30 மணியளவில் துவங்க வேண்டும்.

முவர்கள் வரவில்லை என்றால், 5:45 மணி வரை காத்திருந்து துவங்க வேண்டும். ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பதட்டமின்றி பணியை நடத்தி முடிக்க வேண்டும்.

தேர்தலை நேர்மையாக நியாயமாக நடத்தும் பொறுப்பும், கடமையும் உங்களுக்கு உள்ளது.

ஓட்டுப்பதிவு குறித்து தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிமுறைகள் முறையாக வெளிப்படைத் தன்மையுடன் பின்பற்றி செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே தெரிந்ததுதான் என நினைக்காமல், பயிற்சியை மீண்டும் நல்ல முறையில் கற்க வேண்டும்.

மின்னணு இயந்திரத்தில் பழுது, சந்தேகம் ஏற்பட்டால் மண்டல அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி, சரிசெய்து கொள்ள வேண்டும். மூன்றாம் கட்ட பயிற்சியின்போது, ஓட்டுச்சாவடி மையம் நிர்ணயம் செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஆய்வின்போது, டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா, தாசில்தார் பிரகாஷ் உடனிருந்தனர்.

Advertisement