தி.மு.க., திட்டங்களை நம்பாமல் கூப்பனை நம்புகிறார் ஸ்டாலின்: அன்புமணி காட்டம்

தர்மபுரி: ''முதல்வர் ஸ்டாலின், ஐந்தாண்டு காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை கூறி ஓட்டு கேட்க முடியாமல், கூப்பனை நம்பி ஓட்டு கேட்கிறார்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சித்தார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, கம்பைநல்லுாரில் நடந்த பிரசார கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., இளைஞரணி நிர்வாகி ஒருவர், இரண்டரை வயது குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மாதம் மதுராந்தகத்தில், 14 வயது மாணவியை போதையில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு சென்ற பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வனத்தில் சடலமாக கிடந்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 62,000 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன. இவை, நம் குழந்தைகளுக்கும் நாளைக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஸ்டாலினுக்கு ஆட்சி நிர்வாக திறமை இல்லை. பழனிசாமி முதல்வர் ஆனால் தான் பெண்களை பாதுகாக்க முடியும்.

தி.மு.க.,வினர் ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தில் இருந்து ஓட்டுக்கு பணமும், 8,000 ரூபாய் கூப்பனையும் கொடுப்பர்; ஏமாந்து விடாதீர்கள். கூப்பன் வெற்று காகிதம்.

ஐந்தாண்டு முதல்வராக இருந்த ஸ்டாலின், தன் திட்டங்கள், சாதனைகளை கூறி, ஓட்டு கேட்காமல், 8,000 ரூபாய் கூப்பனை நம்பி ஓட்டு கேட்கிறார்.

ஆனால், 3,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் அந்த கூப்பனையும் தி.மு.க.,வினர் கொடுப்பர்; அதுவும், தி.மு.க., குடும்பத்தினருக்கு தான் கொடுப்பர்.

ஆனால், பழனிசாமி முதல்வரானால், உங்கள் வங்கி கணக்கிற்கு 10,000 ரூபாய் வரும். தி.மு.க., வந்தால், பேப்பர் கூப்பன் தான் தருவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement