தமிழகத்தை பாஜ கட்டுப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்: ராகுல்

30


தூத்துக்குடி: தமிழகத்தையும், மக்களையும் பாஜ கட்டுப்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசினார்


தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: விருதுநகரில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும், அவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்பின்படி, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என வரையறுத்துள்ளது.ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி வரலாறு, பண்பாடு, மொழி உள்ளது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்கள் சமமானவை. சமமான உரிமைகள் உண்டு.

எதிரானது



நமது மாநிலங்களின் சுயமரியாதையும், அடையாளத்தையும் காப்பாற்ற அரசியல்சாசனம் உறுதிபூண்டுள்ளது.இந்த தேர்தல் கொள்கைரீதியிலான மோதலாக இருக்கிறது. ஒரு புறம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக காங்கிரஸ் உள்ளது மறுபுறும், அதிமுக பாஜ உள்ளது.திராவிடம், தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது.

இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அனைத்து வரலாறுகளும், தங்களுக்கு முன்னாள் சரண் அடைய வேண்டும் என விரும்புகின்றனர். நாட்டில் இருக்கும் அனைத்து மொழிகளும்,தங்கள் மொழியின் முன்பும், அனைத்து பண்பாடும், கலாசாரமும், அவர்கள் சொல்லும் கலாசாரத்தின் முன்பு அடிபணிய வேண்டும் என விரும்புகின்றனர்.

சமரசம்



அதிமுகவுக்கு என தனி வரலாறு உள்ளது. கடந்த காலங்களில் தமிழக மக்களுக்கு சேவை செய்து உள்ளது. தமிழக மக்களின் கொள்கையை அக்கட்சி தலைவர்கள் பாதுகாத்தனர். ஆனால், அந்த அதிமுக தற்போது இல்லை. அந்த அதிமுக இறந்துவிட்டது. வரலாறு முடிந்துவிட்டது. இப்போது இருக்கும் ஒன்றும் இல்லாததாக உள்ளது. அதை வைத்து தமிழகத்திற்குள் நுழைய முயற்சிக்கிறது. அதுவே அவர்களின் திட்டம்.


ஊழல் காரணமாக அதிமுக தலைவர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் பல அர்ப்பணிப்புள்ள அதிமுக தொண்டர்கள் இருக்கின்றனர். சில தலைவர்களும், அர்ப்பணிப்புள்ள தலைவர்கள் இருந்தாலும் அவர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை. மோடி, அமித்ஷாவும் அதிமுகவை முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது.

பீஹாரை போன்று



சமீபத்தில் பீஹாரில் நடந்ததை பார்க்க வேண்டும். முதல்வர் பதவியில் இருந்த நிதிஷ்குமார் நீக்கிவிட்டு, பாஜவை சேர்ந்தவரை அமர்த்தி உள்ளனர். நிதிஷ்குமார் பாஜவுடன் கொள்கை சமரசம் செய்து கொண்டுள்ளார். அவர், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்த காலத்தில், அவரை முழுமையாக கட்டுப்படுத்த நிதிஷ்குமார் பாஜவை அனுமதித்தார். இதனை தான் தமிழகத்தில் செய்ய பாஜ நினைக்கிறது. தங்களது முழு கட்டுப்பாட்டில் உள்ள அரசை செய்ய நினைக்கின்றனர். என்ன சொல்கிறோமோ அதனை செய்பவரை முதல்வர் பதவியில் அமர்த்த விரும்புகின்றனர். இதனை காங்கிரஸ் செய்ய அனுமதிக்காது. அவர்களுக்கு என்ன கனவு இருந்தாலும் தமிழக மக்கள், தமிழக அரசை கட்டுப்படுத்த நாங்கள் அனுமதிக்க வேண்டும்.

சார்



பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் முழுமையாக கட்டுப்படுத்துகிறார். பிரதமர் மோடி, தன்னை 'சார்' என அழைக்கிறார் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் போர் துவங்குவதற்கு முன்னர், இஸ்ரேல் செல்லும்படி டிரம்ப் உத்தரவிட்டார்.உடனே மோடியும் இஸ்ரேல் பிரதமரை சந்தித்துவிட்டு திரும்பினார். தமிழக முதல்வர் தன்னை சார் என அழைக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் எப்போதும் அவரை சார் அழைக்க மாட்டார்.

சமூக நீதி



இந்தியா முழுமைக்கும் சமூக நீதி என்றால் என்ன என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.அனைத்து சமுதாயங்களையும், பாரம்பரியத்தையும்எப்படி முன்னேற்றுவது என்பதை தமிழ் சமுதாயம், இந்தியாவிற்கு எடுத்துக்காட்டி உள்ளது. இதுதான் தமிழகத்தின் பாரம்பரியம். கல்சாரம். நாங்கள் இதை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்போம். சமூக நீதிக்கு அடிப்படை அமைத்தவர் காமராஜர். சிறந்த பொது கல்வி திட்டத்தை அடிப்படையை கொண்டு வந்தார். மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு வழிகாட்டினார்.காங்கிரஸ் ஆட்சியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்தோம். இதனை பாஜ அழித்துவிட்டது.


ஏழைகளை எப்படி உதவி செய்வது என்று எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தெரியும். தமிழகத்தில் சமூக நீதியின் அடிப்படையை இன்னும் வலுப்படுத்த விரும்புகிறோம். தமிழகத்தில் முதல்முறையாக சொத்து வாங்கும் பெண்களுக்கும் பத்திரப்பதிவு தள்ளுபடி செய்யப்படும். நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவோம். மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்களுக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவோம். அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம்.


தமிழக மக்களுடன் எனக்கு நெருங்கிய உறவு உள்ளது. தமிழகத்தில் பிறக்காத ஒருவர், தமிழகத்தின் நலனை பாதுகாக்கும் நபர் யார் என கேட்டால், ராகுல் என்ற பதில் கிடைக்கும். உங்களின் போர் வீரனாக டில்லியில் இருந்து தமிழக மக்களின் நலன் உரிமைகளை பாதுகாப்பேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement