பட்டு பூங்காவில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: பட்டு இழைகளால் நெய்யப்பட்ட தேர்தல் வாசகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் செயல்படும் பட்டு பூங்காவில், நெசவாளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதில், பட்டு இழைகளால் நெய்யப்பட்ட தேர்தல் வாசகம் அடங்கிய விளம்பர செய்தி வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

குறிப்பாக, தேர்தலுக்கான விழிப்புணர்வு பணிகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2026ம் ஆண்டிற்கான சட்டசபை பொதுத் தேர்தலுக்கு அனைத்து துறைகள் மூலமாக ஊரக பகுதிகளில் இதுநாள் வரை 1,398 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நகர்ப்புற பகுதிகளில் 456 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என, மொத்தம் 1,854 நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் செயல்படும், அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில், கைத்தறித் துறை சார்பில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

தேர்தல் தொடர்பான வண்ண பொடிகளால் வரையப்பட்ட படங்களையும், எழுதப்பட்ட வாசகங்களையும் தேர்தல் பார்வையாளர் அபய்சிங் மற்றும் காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா ஆகியோர் பார்வையிட்டனர்.

நெசவாளர் குமாரவேல் என்பவர், பட்டு நுாலால் வடிவமைக்கப்பட்ட, தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய, விளம்பர செய்தியை, தேர்தல் பார்வையாளர் அபய்சிங், கலெக்டர் சினேகா ஆகியோர் வெளியிட்டனர்.

தேர்தல் தொடர்பாக நடந்த கலை நிகழ்ச்சிகளை, நெசவாளர்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.

மேலும், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நெசவாளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கைத்தறி துறை துணை இயக்குநர் மணிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் நெசவாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement