இறுதிக்கட்டத்துக்கு வந்த தேர்தல் பிரசாரம் துாக்கம் மறந்து ஓட்டு சேகரிப்பு பயணம்

1

ஈரோடு:தமிழக தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடையும் நிலையில், கடந்த சில நாட்களாக வேட்பாளர்கள், துாக்கத்தை மறந்து ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில், 8 தொகுதிகளில் தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., உட்பட சுயேட்சைகள் என, 118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


தி.மு.க.,வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி., கனிமொழி, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்து பேசினர். இதேபோல் அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்., - பா.ஜ.,வில் அமித்ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், இந்திய கம்யூ., வீரபாண்டியன், த.மா.கா., வாசன் உள்பட பலர் பிரசாரம் செய்து சென்றனர். தலைவர்கள் வருகை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை, 5:30 மணி முதல் 6:00 மணிக்குள் ஒன்று கூடி, 10:30 மணி முதல் 11:00 மணி வரை; மாலையில், 4:00 மணிக்கு கூடி இரவு, 9:30 மணிக்குள் பிரசாரத்தை முடித்து, உணவுடன் கவனிப்பும் வழங்கினர்.
கடந்த, 2, 3 நாட்களாக பிரசார ஓய்வு நேரங்களில் வி.ஐ.பி.,க்கள், ஜாதிய நிர்வாகிகள், வசதி படைத்தவர்கள், கூட்டணி நிர்வாகிகளை சந்தித்தல் என வேட்பாளர்கள் ஓடி தவிக்கின்றனர். நாளை மாலை (21ம் தேதி), 6:00 மணிக்கு பிரசாரம் நிறைவடைகிறது. இதனால் கடந்த வெள்ளி முதலே பிரசாரத்துக்கு வருவோருக்கு இறைச்சி, பிற வெரைட்டி, இனிப்புடன் உணவு வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் முக்கிய வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வீடு தேடி வந்து 'கவனிப்பார்கள்' என்ற கனவுடன் வாக்காளர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டி களை கட்டுகிறது.

Advertisement