திருவிழாவில் ஏற்பட்ட தகராறு சிறுவன் உள்பட 4 பேர் கைது

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் உள்பட, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பத்துார் அடுத்த கூடப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்துரு, 26. வி.சி.க., இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய செயலாளர். இவரது நண்பர், 17, வயது கல்லுாரி மாணவர். இருவரும் நேற்று முன்தினம் பக்கத்து கிராமமான சுண்ணாம்பு குட்டை பகுதியில் நடந்த நாகலம்மன் கோவில் திருவிழாவிற்கு, அம்பேத்கர் படம் உள்ள டீ-சர்ட் அணிந்து சென்றனர். அப்போது அவர்களை, அங்கிருந்த குரிசிலாப்பட்டு மற்றும் வவ்வால் தோப்பு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்டோர், கத்தி, பீர் பாட்டில், கட்டைகளை கொண்டு தாக்கினர். இதில், படுகாயமடைந்த இருவரும், திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குரிசிலாப்பட்டு போலீசார் விசாரித்து வந்த நிலையில், தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி, வி.சி.க.,வினர் திருப்பத்துார் - ஆலங்காயம் சாலையில் நேற்று முன்தினம் மாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்துார் டி.எஸ்.பி., முரளி மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக
கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
வாலிபர்களை தாக்கிய, 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மதன், 19, பிரவீன், 19, சிலம்பரசன், 23, மற்றும், 18 வயது சிறுவன் உள்பட, 4 பேரை, நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement