வாக்காளரின் அடையாளத்தில் சந்தேகமா? 'சேலஞ்ச்' ஓட்டுக்கு ரூ.2 செலுத்த வேண்டும்

கரூர்:'ஓட்டுச்சாவடிகளில், வாக்களரின் அடையாளத்தில் சந்தேகம் இருந்தால், 'சேலஞ்ச்' ஓட்டுக்கு, இரண்டு ரூபாய் செலுத்த வேண்டும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், வரும், 23ல் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்காக, பல்வேறு விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதில், ஓட்டுப்போட வரும் வாக்காளர் ஒருவரின் அடையாளம் பற்றி, ஓட்டுச்சாவடி முகவர் ஆட்சேபனை தெரிவித்தால், அவரிடம், 'சேலஞ்ச்' கட்டணமாக, இரண்டு ரூபாய் பெற்றுக்கொண்டு ரசீது வழங்க வேண்டும்.
பின், விசாரணையில் முகவர் அளித்த ஆட்சேபனை தவறு என்றால், வாக்காளரை மிஷினில் ஓட்டுப்போட அனுமதிக்க வேண்டும். முகவரிடம் இருந்து பெறப்பட்ட, இரண்டு ரூபாயை திரும்ப வழங்க கூடாது. ஆட்சேபனை சரி என நிரூபிக்கப்பட்டால், இரண்டு ரூபாயை முகவரிடம் வழங்க வேண்டும். போலி வாக்காளரை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
வயது குறைவா?
ஓட்டுப்போட வரும் வாக்காளர், ஒருவர் தோற்றத்தில், 18 வயது குறைந்தவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டால், அந்த வாக்காளரிடம், 'டிக்ளரேஷன்' ஏபவுட் ஏஜ் (இணைப்பு-7) என்ற படிவத்தில் கையழுத்து பெற்றுக்கொண்டு ஓட்டுப்போட

அனுமதிக்கலாம்.


ஓட்டுப்பதிவின் ரகசியம்

தேர்தல் நாளில், ஓட்டுப்பதிவு துவங்கும் முன், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு, 128ன் படி
ஓட்டுப்பதிவின் ரகசியத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். ஓட்டுச்சாவடிக்குள் விரல் அல்லது அங்க அசைவுகள் மூலம் குறிப்பிட்ட சின்னங்களுக்கு ஆதரவாக ஓட்டளிக்க துாண்டும் வகையில் முகவர்களோ, மற்றவர்களோ செயல்பட கூடாது. அதேபோன்று, ஓட்டுப்போட்டவரும், தான் ஓட்டு போட்டதை வெளிப்படுத்த கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement