லஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் நெருப்பில் குதிக்கிறேன்: அமைச்சர் துரைமுருகன்

42

காட்பாடி: “நான் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால், நெருப்பில் குதித்து விடுகிறேன்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், 'நான் சாதாரண பள்ளி பையன் தான்' என தன் சமூகம் குறித்து பேசினார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.


காட்பாடி பகுதியில், நேற்று அவர் பேசியதாவது: பொது வாழ்க்கையில் ஒழுக்கம் அவசியம். கடந்த 50 ஆண்டுகளில், நான் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காட்ட சொல்லுங்கள். நான் இங்கேயே நெருப்பில் குதித்து விடுகிறேன். காட்பாடிக்கு நீதிமன்றம், தாலுகா அலுவலகம், சட்டக்கல்லுாரி, டி.எஸ்.பி., அலுவலகம், பல்கலை, மருத்துவமனை கொண்டு வந்துள்ளேன். தொகுதிக்கு எவ்வளவு செய்தும், என்னை சிலர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.


கத்தரிக்காய் விற்றது உள்பட எல்லா வேலைகளையும் செய்த, 'சாதாரண பள்ளி பையன் தான்' இந்த துரைமுருகன். சிலர், தன்னை பெரிய ஆள் என நினைக்கிறான். என்னை சாதாரணமாக எடை போடாதீர்கள். டிகிரி முடித்து ஹைகோர்ட்டில் வக்கீலாக இருந்துள்ளேன். என்னடா ஜாதி? எத்தனை பெரிய ஜாதியும் என்னுடன் போட்டி போட முடியுமா? நான் யார் என்பதை அவர்களுக்கு காட்ட தயாராக இருக்கிறேன். அதற்கு நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இனிமேல் வருகிற தேர்தலில் நான் நிற்பேனா என்பது தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காட்பாடியில் உள்ள தன் இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றிய பின், துரைமுருகன் அளித்த பேட்டியில், “ஐந்து மாநில தேர்தல் நடைபெறும்போது, தொகுதி மறுசீரமைப்பு அவசியமா? பா.ஜ., வலையில் அ.தி.மு.க., மாட்டி கொண்டுள்ளதால், தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நேற்று கட்சி துவங்கிய விஜய் கூட, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இன்னும் யார் பிடியிலும் அகப்படவில்லை போல, அவர் பாவம்,'' என கூறினார்.

Advertisement