ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்: நா.த.க., சீமான் சாபம்

8

சென்னை: ''எனக்கு ஓட்டு போடாதீர்கள், ஸ்டாலின் வெல்லட்டும், நாடு சுடுகாடாக ஆகட்டும்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார்.

சென்னை, பல்லாவரம் தொகுதியில், நடந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது:

மாட்டு சாணத்தில் இருந்து மீத்தேன் எடுப்பேன். பூமித்தாயை தொட்டால், வெட்டி எறிவேன். பூமித்தாய்க்கு நோய் வந்தால், நமக்கும் வரும். நீங்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம். இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்குமே ஓட்டு போடுங்கள். ஸ்டாலின் வெல்லட்டும்; நாடு சுடுகாடாக ஆகட்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு ஆறுகளில் உள்ள கழிவுகளை அகற்றி, இருபுறமும் பெரிய அளவிலான குழாய்களை பதித்து, கழிவுநீரை எடுத்து செல்வேன்.

அதை, புறநகரில் 200 ஏக்கர் பரப்பில் சுத்திகரிப்பு ஆலை அமைத்து, மறுசுழற்சி செய்வேன். இதில் கிடைக்கும் நீரை, மரம் வளர்க்க, சாலை உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்துவேன்.

இதனால் நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்காது. அங்கு, விளையாட்டு திடல், படகு சவாரி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, சுற்றுலாத் தலமாக மாற்றுவேன்.

சென்னையில் ஆண்டுக்கு 6.60 லட்சம் லிட்டர் தண்ணீர் மழை வாயிலாகவே கிடைக்கிறது. இதில், பூமிக்கு கீழ் மழைநீர் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்தப்படும். அதில், மின்சாரமும் தயாரிக்கப்படும்.

சென்னைக்கு மட்டுமே, தினமும் 120 கோடி லிட்டர் தண்ணீர் தேவையாக உள்ளது. மக்களுக்கு தேவையான நீரை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள நீர் கடலில் விடப்படும்.

நான் சாத்தியம் இல்லாததை சொல்லவில்லை. நான் எப்படி செய்வேன் என கேட்போர் உண்டு. எப்படி செய்வோம் எனவும் தொடர்ந்து விளக்கமாகவே சொல்லி வருகிறேன். இந்த நாடு நல்லா இருக்க வேண்டுமென்றால், விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.

இவ்வாறு பேசினார்.

Advertisement