எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு: கடைசி நேரத்தில் விஜய் திடீர் முடிவு

28

நமது நிருபர்




சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் களம் காணும் சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக விஜய் அறிவித்துள்ளார்.


எடப்பாடி சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களை உறுதி செய்ய முடியாத காரணத்தால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

அருண்குமார் கடத்தப்பட்டுவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. ''எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாகவும், அவர் கருப்புஆடு என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா விமர்சித்து இருந்தார். எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிடாத சூழ்நிலை உருவானது.


இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டசபை தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.


எடப்பாடி சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார் முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டசபை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான பிரேம்குமாரையும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் பிரேம்குமாரை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் கமிஷனால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12ல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டுகிறேன்.


நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கட்சி நிர்வாகிகளையும், எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Advertisement