பயோமெட்ரிக் வருகை பதிவேடு அரசு ஆபீஸ்களில் இனி கட்டாயம்

புதுடில்லி.''டில்லி மாநில அரசின் அலுவலகங்களின் அனைத்து துறைகளிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு இயந்திரங்களை நிறுவ வேண்டும்,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

சமீபத்தில், மாநில முதல்வர் ரேகா குப்தா மாநில அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது, பல அலுவலங்களில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வராமல் இருந்ததை கண்டுபிடித்தார்.

இந்நிலையில், மாநில நிர்வாக சீரமைப்பு துறை, அனைத்து துறை அலுவலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

அனைத்து துறை அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

அந்த முறை சரியாக பயன்படுத்தப்படுகிறதா அல்லது செயல்படுகிறதா என்பதை மூத்த அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து துறை அலுவலர்களும், பயோ மெட்ரிக் முறையிலேயே தங்கள் வருகையையும், செல்கையையும் பதிவு செய்ய வேண்டும்.

தாமதமாக வரும் அரசு அலுவலர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும். இதில், எவ்வித தயக்கமும் இருக்கக் கூடாது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Advertisement