மதமாற்ற பிரச்னையால் மஹா., தனியார் நிறுவனம்  தற்காலிக மூடல்!: வீட்டிலிருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு உத்தரவு

34

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் தனியார் நிறுவன விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, 'கட்டாய மதமாற்றத்தை தடுக்க, நாடு முழுதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர் சர்ச்சையால் நாசிக்கில் இயங்கி வரும் அந்த நிறுவனத்தின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மஹாராஷ்டிராவின் நாசிக்கில், பிரபல ஐ.டி., நிறுவனத்தின் பி.பி.ஓ., செயல்பட்டு வருகிறது.

இங்கு பணிபுரியும் 25 - 32 வயதுடைய பெண்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக அங்கிருந்த ஊழியர்கள் பலர், பாலியல் தொல்லை கொடுத்தாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, ஒன்பது பெண் ஊழியர்கள் போலீசில் புகாரளித்தனர்.

அதில், 'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.

கைது





' ஹிந்து தெய்வங்களை அவதுாறாக பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்துவது போன்ற செயல்களும் நிறுவனத்தில் நடந்தன. மறுக்கும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டனர்.

'உயர் அதிகாரிகள் இந்த கொடுமைகளை தடுக்காமல், அந்த செயல்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தினர்' என, தெரிவித்திருந்தனர்.

அந்நிறுவனத்தில் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டதும், அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பெண்களுக்கு தொல்லை தந்ததும் உறுதியானது.

இந்த விவகாரத்தில், நிறுவனத்தில் பணியாற்றிய ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள மனிதவள துறை அதிகாரி நீடா கானை தேடி வருகின்றனர். இந்த சூழலில், பாலியல் அத்துமீறல், கட்டாய மதமாற்றம் தொடர்பாக சி.இ.ஓ., தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது' என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாசிக்கில் செயல்படும் நிறுவனமும் தற்காலிகமாக மூடப்பட்டு, மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உரிமை உண்டு





இந்நிலையில், தனியார் ஐ.டி., நிறுவனத்தில் நடந்த கட்டாய மதமாற்ற சம்பவத்தை முன்னிறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:

ஒவ்வொருவருக்கும், தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும் உரிமை உண்டு; ஆனால், இந்த சுதந்திரம் பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியத்துக்கு உட்பட்டது என அரசியல் சாசனம் சொல்கிறது.

ஐ.டி., நிறுவனத்தில் நடந்த இந்த விவகாரத்தை சாதாரணமான குற்றமாக பார்க்காமல், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான பயங்கரவாத செயலாக நீதிமன்றம் கருத வேண்டும்.

அதற்கேற்ற சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய மதமாற்றங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கின்றன. இவை, பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் கீழ் கையாளப்பட வேண்டும்.

காலக்கெடு





மதமாற்றம் தொடர்பான வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக விசாரித்து, விரைவான தீர்ப்பு வழங்க நாடு முழுதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்-.

இத்தகைய வழக்குகளில் புலனாய்வு மற்றும் விசாரணையை துரிதப்படுத்த காலக்கெடு விதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மதமாற்றம் விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட தேசிய மகளிர் கமிஷன், நாசிக்கில் உள்ள ஐ.டி., - பி.பி.ஓ., நிறுவனத்தில் நாளை நேரடி விசாரணை மேற்கொள்ள உண்மை கண்டறியும் குழுவை நியமித்துள்ளது.

Advertisement