பிரச்னை என்றால் போன் பண்ணுங்க விசிட்டிங் கார்டு அளித்து ஓட்டு சேகரிப்பு அமைச்சர் ரமணா புதுயுக்தி 

திருவாலங்காடு: “பிரச்னை என்றால், எனக்கு போன் பண்ணுங்க; கட்டாயம் தீர்வு காணப்படும்,” என, விசிட்டிங் கார்டு கொடுத்து முன்னாள் அமைச்சர் ரமணா பிரசாரம் மேற்கொண்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருவள்ளூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ரமணா போட்டியிடுகிறார். இவர், திருவாலங்காடு மேற்கு ஒன்றியத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். ஒன்றிய செயலர் சக்திவேல் உடனிருந்தார்.

அப்போது ரமணா கூறியதாவது:

திருவள்ளூர் தொகுதியை அதலபாதாளத்தில் தள்ளியவர் தற்போதைய தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜேந்திரன். குறிப்பாக, குன்னத்துார், நாபளூர் உட்பட 20 கிராமங்களை, அவர் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இங்கு அதிகளவில் விவசாயிகள் வசிக்கின்றனர். அவர்களின் அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்யவில்லை.

மாறாக, அவரது கட்சியினர், நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு 60 - 80 ரூபாய் வசூலித்தனர்.

அதுதான் ஓட்டளித்த மக்களுக்கு அவர் செய்த நன்றிக்கடன். நான் எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றால், உங்களின் அடிப்படை பிரச்னைகளை மூன்று மாத காலத்திலும், பெரிய அளவிலான பிரச்னைகளை ஆறு மாத காலத்திலும் நிறைவேற்றுவேன்.

பிரச்னை என்றால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால், நான் அப்படியல்ல. என்னுடைய விசிட்டிங் கார்டு அளிக்கிறேன். அதில், என்னுடைய மொபைல்போன் எண் உள்ளது. நீங்கள் என்னை எப்போது வேணாலும் அழைத்து பிரச்னையை தெரிவிக்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் ஓட்டளித்து, எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த தேர்தலில் அவருடைய சீட்டை கிழிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த தேர்தலில் எனக்கு ஓட்டளியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவருடன், பா.ம.க., - பா.ஜ., -- புரட்சி பாரதம் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement