அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் இன்று விநியோகம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.,பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதியே புதிய கல்வி ஆண்டிற்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால், புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது ஓட்டுப்பதிவு முடிந்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை இதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. புதுச்சேரிக்கு வந்து சேர்ந்துள்ள பாடப்புத்தகங்களை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்தப் பள்ளிகளுக்குப் பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது.

இந்நிலையில் இன்று​ முதல் அந்தந்தப் பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஸ்டோர் கீப்பர்கள், தங்கள் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புத்தகங்களைப் பெற்றுச் செல்லுமாறு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இன்று முதல் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.

Advertisement