இந்த முறை ஓட்டு யாருக்கு: ஏன்

திராவிட கட்சிகளுக்கு மாற்று நா.த.க.,



வா ரிசு அரசியல் என்பது தி.மு.க.,விற்கு மட்டுமல்ல; அ.தி.மு.க.,விற்கும் பொருந்தும். இரு கட்சிகளிலும், அமைச்சர்களின் வாரிசுகள் தான், அடுத்தகட்ட அரசியலை வழிநடத்துகின்றனர். ஒரு கூட்டம் மட்டும், அதிகாரத்தில் நீடிப்பதும், பெரும்பான்மை மக்கள் கடைசி வரை, அரசியல் என்பது ஓட்டு போடும் உரிமை மட்டுமே என கடந்து போவதும் தான், இரு திராவிட கட்சிகளிடம் இருந்தும் கற்ற பாடமாக இருக்கிறது.

இவ்வகையில் முற்றிலும் மாறுபட்டவராக, நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமானை பார்க்கிறேன். பெண்களுக்கு அதிகளவில் முன்னுரிமை, கட்சிக்கு உழைப்போருக்கு வேட்பாளர் பதவி, சாமானியருக்கு புரியும் விதத்தில் அரசியல் கட்டமைப்பை எளிமையாக்கியது, இளைஞர்களை அதிகளவில் அரசியலுக்குள் கொண்டு வந்தது போன்ற புரட்சிகள், நா.த.க.,வில் மட்டுமே நடந்துள்ளன.

எந்த கொள்கையும் இன்றி, சினிமா பின்னணியில் வந்தவருக்கு ஓட்டு போடுவதை விட, சீமானின் ஓட்டு வங்கியை மேலும் அதிகரித்து, அசைக்க முடியாத கட்சியாக உருவாக்குவது நல்லது என நினைக்கிறேன். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, நா.த.க., மட்டுமே இருக்கிறது.


செ.மதன்குமார், 20 கோவை

பெண்களுக்கு பாதுகாப்பு தரும் அ.தி.மு.க., ஆட்சி



த மிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்து விட்டது. போதை கலாசாரம் அதிகமானதே முக்கிய காரணம். அ.தி.மு.க., ஆட்சியில் போலீஸ் கட்டுப்பாடு அதிகமாக இருந்தது. இதனால், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. தி.மு.க., ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. அ.தி.மு.க.,வில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்கள், மக்களுக்கு உதவியாக இருந்ததே தவிர, எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

பெண்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பு தரும் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். நாம் தமிழர் மற்றும் த.வெ.க.,வால், ஓட்டுகளை பிரிக்க மட்டுமே முடியும். ஆட்சி கட்டிலில் அமர வாய்ப்பே கிடையாது. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் நடந்த சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை நினைத்து பார்த்து, மக்கள் ஓட்டு போட வேண்டும்; பணத்தை பார்த்து ஓட்டு போடக் கூடாது. அப்படி செய்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். என் ஓட்டு அ.தி.மு.க.,வுக்கு தான்.

சுமித்ரா, 29 ஈரோடு

Advertisement