துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம்

புதுடில்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இரு நாள் அரசு முறை பயணமாக, இன்று நம் அண்டை நாடான இலங்கை செல்கிறார்.

இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

இன்று இலங்கை செல்லும் துணை ஜனாதிபதி ராதா கிருஷ்ணன், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்து பேச உள்ளார். அதன் பின், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத் தலைவர்கள் மற்றும் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் தமிழ் தலைவர்களை சந்திக்கிறார்.

அதன் பின், கொழும்புவில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் உரையாற்ற உள்ளார். அங்கு, நம் மத்திய அரசின் உதவியுடன் இலங்கைத் தமிழ் சமூகத்தினருக்காக புதிதாக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூன்றாம் கட்ட பயனாளிகளுக்கான வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.

இதையடுத்து நாளை நுவரேலியாவுக்கு செல்லும் அவர், இந்திய அரசு உதவியுடன் அங்கு கட்டப்படும் வீடுகளை பார்வையிடுவார். உள்ளூர் தமிழ் சமூகத்துடன் கலந்துரையாட உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement