அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி :தமிமுன் அன்சாரி திட்டவட்டம்  

சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என ம.ஜ.க., வேட்பாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

தி.மு.க., கூட்டணியில், சிதம்பரம் தொகுதியில் ம.ஜ.க., சார்பில், உதயசூரியன் சின்னத்தில், அக்கட்சி வேட்பாளர், தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார்.

அவர், நேற்று சிதம்பரம் நகர பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில், கூட்டணி கட்சியினர் காங்., மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், மா.கம்யூ., ராஜா, வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ்வளவன், செல்லபப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் மலர் துாவி

சால்வை அணிவித்து, அவரை வரவேற்றனர்.

அப்போது தமிமுன் அன்சாரி கூறியதாவது:

சிதம்பரம் நகரில், 9 குளங்கள் துார்வாரி, மக்களின் மனது மட்டுமின்றி, ஆரோக்கியமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

ரூ.266 கோடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நகரில் காய்கறி மார்க்கெட் பிரம்மாண்டமாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய பஸ் நிலையம் சீரமைப்பு, புதிய பஸ் நிலையம் அமைத்து நகர விரிவாக்கம் என பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவு பெற்று உள்ளதால் நான் எளிதில் நகர மக்களை சந்திக்க முடிகிறது.

சிதம்பரத்தில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக நகரில் அதிகளவு ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement