கருப்பு என்பது காளி தேவியின் நிறம்: பார்லி.,யில் கனிமொழி பேச்சு

221

புதுடில்லி: ''கருப்பு என்பது காளி தேவியின் நிறம்'' என பிரதமர் மோடிக்கு, தி.மு.க., - எம்.பி., கனிமொழி பதிலளித்துள்ளார்.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை, வரும் 2029 லோக்சபா தேர்தலுக்குள் அமல்படுத்த, மத்திய பா.ஜ., அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., வினர் கருப்பு உடையணிந்தும், சட்ட மசோதா நகலை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, பார்லிமென்டில் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற, தி.மு.க., - எம்.பி.,க்களும் கருப்பு உடை அணிந்து சென்றனர்.

லோக்சபாவில், இதை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, 'ஒரு நல்ல விஷயத்தை தொடங்கும் முன், தீய சக்தியின் கண் படாமல் இருக்க, கருப்பு திலகமிடும் பாரம்பரியம் உள்ளது. அதை செய்த தி.மு.க., வினருக்கு நன்றி' என, கிண்டலாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்து, லோக்சபாவில் தி.மு.க., - எம்.பி., கனிமொழி நேற்று பேசியதாவது: ஹிந்துத்துவாவை பாதுகாப்பதாக சொல்லும் பா.ஜ.,வுக்கு, கருப்பு தெய்வமான காளி நினைவில் இல்லை. காளியை மறந்து விட்டீர்களா? பெண் சக்தியை பறைசாற்றும் பெண் தெய்வமான காளியும் கருப்பு உடை தான் அணிந்துள்ளார். அவர் தான், அராஜகம் போன்றவற்றை விரட்டும் தன்மை கொண்டவர்.

அத்தகைய கருப்பு வண்ணத்தை தேர்வு செய்து, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் கடைசி வரை நாங்கள் போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement