உச்சிப்புளியில் விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கு வலியுறுத்தல்

ராமநாதபுரம்: உச்சிப்புளி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில்களும், கோவைக்கு வாராந்திர ரயிலும் இயக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை, கோவை, பெங்களூரு பகுதிகளில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் பயனடைகின்றனர். ராமேஸ்வரம் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் ராமநாதபுரம், பரமக்குடியில் மட்டும் நின்று செல்கிறது.

இதனால் ராமேஸ்வரம்--ராமநாதபுரம் இடையே உள்ள கிராம மக்கள் ரயில் ஏறுவதற்கு நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக உச்சிப்புளி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர். சங்க செயலாளர் சகாயவினோத் கூறியதாவது: உச்சிப்புளி பகுதியை சுற்றி வெள்ளரிஓடை, கோரவள்ளி, இரட்டையூரணி, தாமரைக்குளம், புதுமடம், மானாங்குடி, கடுக்காய் வலசை, பிரப்பன்வலசை, இருமேனி, நாகாச்சி, செம்படையார்குளம், பெருங்குளம், ஆற்றாங்கரை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த கிராமங்களில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் பலர் வெளி மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்.

இதனால் ஊருக்கு வந்து செல்வதற்கு ராமநாதபுரம் அல்லது ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு 30 முதல் 60 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. உச்சிப்புளி ரயில் நிலையத்தில் தற்போது விரைவு ரயில்கள் நிற்கும் அளவிற்கு நடைமேடை அகலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை செல்லும் விரைவு ரயில்களை உச்சிப்புளியில் சோதனை அடிப்படையில் நின்று செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ---

Advertisement