தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பெங்களூரு: 'கர்நாடகாவில், 10ம் வகுப்பில், ஹிந்தி உள்ளிட்ட பிற மூன்றாம் மொழிகளுக்கு தரமதிப்பீட்டுக்கு பதிலாக, மதிப்பெண்களே வழங்க வேண்டும் என்ற உத்தரவை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனக்கோரி, உயர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், 10ம் வகுப்பு தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது, கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, 'ஹிந்தி உள்ளிட்ட மூன்றாம் மொழி பாடங்களுக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக தர மதிப்பீடு வழங்கப்படும். நடப்பு நிதியாண்டு முதலே இரு மொழி முறை அமல்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.

இதை எதிர்த்து, சிக்கமகளூரை சேர்ந்த மூன்று மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தற்போதுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, 2025 - 26ன் 10ம் வகுப்பு தேர்வில், ஹிந்தி உள்ளிட்ட மூன்றாம் மொழி பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்' என, மாநில அரசுக்கும், கே.எஸ்.இ.ஏ.பி., என்ற கர்நாடக மாநில தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதன் விபரம்:

ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மூன்றாம் மொழிகளுக்கும், 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால், 'ஏ' தரமதிப்பீடும்; 50 முதல் 79 மதிப்பெண்கள் பெற்றால் , 'பி' தரமதிப்பீடும்; 49 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றால், 'சி' தரமதிப்பீடும் வழங்கப்படும். இருப்பினும், எந்த மாணவரும் தோல்வியடைய மாட்டார்கள்.

மதிப்பெண்களுக்கு பதிலா க தரமதிப்பீடு வழங்குவது ஒரு சீர்திருத்த நடவடிக்கை. இது, பெரும்பாலான மாணவர்களுக்கு பயனளிக்கும். அரசின் இந்த நடவடிக்கை மூன்றாம் மொழியை புறக்கணிக்க வழிவகுக்கும் என்ற வாதத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, ஏப்ரல், 15ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement