ஜாதி, மதமில்லாதவர் பார்த்திபன் சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விபரம்:

கடந்த 1958ம் ஆண்டு ஜன.,14ம் தேதி பிறந்த, எனக்கு பிறப்பு சான்று இல்லை. பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின், சான்றுகளைப் பெறவில்லை. ஜாதி, மதத்தை தெரிவிக்கும், பிறப்பு சான்றோ, கல்வி சான்றுகளோ இல்லை.

ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, ஜாதி - மதமற்றவர் என, சான்று வழங்க கோரி, வேளச்சேரி தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். தற்போது அந்த விண்ணப்பம், சோழிங்கநல்லுார் தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பணிகள் காரணமாக, என் விண்ணப்பத்தை பரிசீலிக்க இயலவில்லை என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்து வருவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி எம்.தண்டபாணி, நடிகர் பார்த்திபனுக்கு, ஒரு வாரத்திற்குள் ஜாதி, மதமற்றவர் என, சோழிங்கநல்லுார் தாசில்தார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

Advertisement