திருவாடானை தொகுதியில் போலீசார் தபால் ஓட்டுப்பதிவு 

திருவாடானை:திருவாடானை தொகுதியில் பணியாற்றும் போலீசார்கள் ஆர்வத்துடன் தபால் ஓட்டளித்தனர்.

தேர்தல் நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் அவசர மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசி பணிகளில் இருப்பவர்கள் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டுப்பதிவு நடந்தது. வரிசையில் நின்று போலீசார் தபால் ஓட்டளித்தனர். தேர்தல் பணியில் ஈடுபடும் மற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓட்டுப்பதிவு இன்று (ஏப்.20) காலை திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நடக்கும். ஏப்.,22 வரை மூன்று நாட்களுக்கு இந்த வசதி செய்யபட்டுள்ளது.



இது குறித்து திருவாடானை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் கூறியதாவது- தபால் ஓட்டுபதிவுடன் மறுபுறம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இறுதி கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு சின்னக்கீரமங்கலம் தனியார் பள்ளியில் இன்று (ஏப்.20) நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுதல் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கபடும். பிற மாவட்டங்களில் பணியாற்றும் திருவாடானை தொகுதி வாக்காளர்களிடம் தபால் ஓட்டுகள் சேகரிக்கபட்டு வருகின்றன. அதுபோல் இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு செலுத்தபட்ட தபால் ஓட்டுகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு செல்லபட்டு அங்கிருந்து அவை பிரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பபடும் என்றார்.

---

Advertisement