போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுப் பணித்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 7:00 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரித்து விடுகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அத்தியவாசிய தேவைக்காக பைக்குகளில் நகரப்பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் சிக்னல்களில் காத்திருக்கும் போது வெயிலினால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால், சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பொதுப் பணித்துறை சார்பில் காற்றில் சரிந்து விடாத வகையில் இரும்பு குழாய்கள் மூலம் பலமான துாண்கள் கொண்டு, அஜந்தா, அண்ணா சாலை உள்ளிட்ட அனைத்து சிக்னல்களிலும் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிக்னல்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைவதால், நகரப்பகுதிகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement