பெண்கள் அதிகாரம் பெற்றால் தங்களுக்கு பாதிப்பு என காங்.,, தி.மு.க.,வுக்கு அச்சம்: மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டேவியா விளாசல்

33

மதுரை: 'பெண்கள் அதிகாரம் பெற்றால் தங்கள் குடும்ப ஆதிக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என காங்., தி.மு.க., கட்சிகள் அச்சமடைந்துள்ளன' என்று மத்திய தொழிலாளர் மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா மதுரையில் கூறினார்.

அவர் கூறியதாவது:

காங்., தி.மு.க.,வினரின் மனநிலை மகளிர் அதிகாரம் பெறுவதற்கு எதிராக உள்ளது. அவர்கள் சார்ந்த சில குடும்பங்களே அரசியல் அதிகாரத்தை கட்டுப்படுத்துபவையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். பத்தாண்டுகளாக அக்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறுத்தி வைத்திருந்ததோடு, வாய்ப்பு வந்தபோது அதனை தடுத்தன. மகளிர் அதிகாரம், இடஒதுக்கீடு வெறும் பேச்சாக மட்டுமே இருக்க வேண்டும், செயல்பாட்டுக்கு வரக்கூடாது என்ற மனோபாவம்தான் உள்ளது.

பெண்களின் வாழ்க்கை அடிப்படையில் மாற்றம் பெற வேண்டும் என்பதற்காகவே, 4 கோடி பேர் பயன்பெற சத்துணவு, நிதிஆதாரம் வழங்கும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டம் உள்ளது. 12 கோடி பெண்கள் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா மூலம் வங்கிக் கணக்குத் துவங்கியுள்ளனர். 67 சதவீதத்தினருக்கு மேல் வங்கிகளில் ரூ.16.33 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர்.

பெண்களில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 5.6 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அரசியல் சாசனம் குறிப்பிட்ட காலத்தில் தொகுதி மறுவரையறை செய்ய கூறுகிறது.

இவ்வகையில் லோக்சபாவில் மசோதாக்கள் வெற்றி பெற்றிருந்தால் 131 தொகுதிகள் 205 ஆக அதிகரித்து எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பலம் கிடைத்திருக்கும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் 59 ஆகவும், கேரளாவுக்கு 20ல் இருந்து 30 ஆக, கர்நாடகாவுக்கு 28 ல் இருந்து 42 ஆக, ஆந்திராவுக்கு 25ல் இருந்து 38 ஆக, தெலுங்கானாவுக்கு 17 ல் இருந்து 26 ஆக உயர்ந்திருக்கும்.

இந்த வாய்ப்பை காங்கிரசும், தி.மு.க.,வும் தடுத்துவிட்டன. அதிக தொகுதிகள், பிரதிநிதித்துவம் வருவது, அவர்களின் குடும்ப ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்யும் என பயப்படுகின்றன. சாதாரண வீட்டுப் பெண்கள் அரசியலில் நுழைந்தால் அவர்களின் ஏகாதிபத்தியம் பாதிக்கும் என அஞ்சுகின்றனர்.

இந்திய பெண்கள் முன்னேறி செல்வதை எந்த அரசியல் தடைகளும் ஒன்றும் செய்து விடமுடியாது. தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்போருக்கு ஜனநாயக முறையில் பெண்கள் பதிலடி கொடுப்பர்.

இவ்வாறு கூறினார்.

@block_B@

எங்களை 'கூத்தாடிகள்' என்பதா: குஷ்பு கொந்தளிப்பு

மதுரையில் பா.ஜ., மாநில துணை தலைவர் குஷ்பு கூறியதாவது: மத்தியில் காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சி இருந்தபோது, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை ஏன் நிறைவேற்றவில்லை. தற்போது தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மகளிர் மசோதாவை தடுத்து,பெண்கள்முன்னேறுவதைத் தடுத்து அவர்களின்நெஞ்சில் குத்திவிட்டன. தி.மு.க., கூட்டணியில் உள்ளவர்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு, மசோதாவைப்பற்றியும் எவ்வித அடிப்படைப் புரிதலும் கிடையாது. நடிகர் பிரகாஷ்ராஜ் நான் கட்சி மாறியதைப் பற்றி விமர்சித்துள்ளார். தி.மு.க., வின் வரலாறை எடுத்துப்பாருங்கள். தற்போதுள்ள அமைச்சர்கள் எத்தனை பேர் கட்சி மாறி வந்துள்ளனர் என்று தெரியும். என் கணவரின் அரசியல் வருகை பற்றி கேள்வியெழுப்ப, தேர்தலில் டிபாசிட் இழந்த பிரகாஷ்ராஜூக்கு எந்ததகுதியும் கிடையாது. எங்களைப் பார்த்து கூத்தாடிகள் என்று சொல்கிறார்கள். ஊடகத்தில் பெயர் வர வேண்டும் என்பதற்காக மலிவு விளம்பரம் செய்பவர்கள் நாங்கள் இல்லை. யார் எங்களை கூத்தாடிகள் என்று சொன்னார்களோ, அவர்களுக்கு பிரசாரம் செய்ய சத்யராஜ், பிரகாஷ்ராஜ் போன்ற கூத்தாடிகள் தானே தேவைப்படுகின்றனர் என்றார்.block_B

Advertisement