தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக மீண்டும் நோட்டீஸ்

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனராக, கடந்தாண்டு பிப்ரவரியில், ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். இவர், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

குறிப்பாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், உண்மையான வாக்காளர்கள் பலர் வேண்டுமென்றே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக, தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி புகார் எழுப்பி வருகிறது.

இவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி, சமீபத்தில் நடந்து முடிந்த பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் இண்டி கூட்டணி நோட்டீஸ் அளித்தது.

இந்த நோட்டீஸ்களை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணனும் நிராகரித்தனர்.

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க மீண்டும் நோட்டீஸ் கொண்டு வர இண்டி கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., - சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் மூத்த எம்.பி.,க்கள் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த நோட்டீஸ் பார்லி.,யின் எந்த சபையில் கொண்டு வரப்படும் அல்லது கடந்த முறை போலவே இரு சபைகளிலும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. 131வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா தோல்வியால் உற்சாகமடைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், இந்த முறை நோட்டீசில் அதிக எம்.பி.,க்களின் கையெழுத்தை பெற இலக்கு வைத்துள்ளனர்.

குறைந்தது, 200 எம்.பி.,க்களின் ஆதரவை திரட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஜூலை - ஆகஸ்டில் நடக்கவுள்ள பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், இந்த பதவி நீக்க நோட்டீசை எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement