தேர்தல் வரலாற்றில் முதல் முறை ஓட்டுச்சாவடிகளில் 'கலர் பாதை'

1

கோவை: ஓட்டுச்சாவடிகளில் செய்ய வேண்டிய முக்கிய நடை முறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமார், இந்நடைமுறையை விளக்கினார். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வாக்காளர்கள் தங்களது ஓட்டுச்சாவடிகளை எளிதில் கண்டறியும் விதமாக, ஓட்டுச்சாவடிக்கு செல்லும் பாதையில் நிறங்கள் பூசப்படும். முக்கிய இடங்களில் வழிகாட்டும் விதமாக நிறப்பலகைகள் வைக்கப்படும்.

நுழைவாயிலில் இருந்து ஓட்டுச்சாவடி அமைந்துள்ள கட்டடம் வரை நீலம், பிங்க், லாவண்டர், பிரவுன் மற்றும் மெரூண் ஆகிய 5 நிறங்களில் தரையில் வண்ணங்கள் பூசப்படும்.

இதே நிறங்களில் டீ-சர்ட் அணிந்த தன்னார்வலர்கள் வாக்காளர்களுக்கு வழிகாட்டும் வகையில் நியமிக்கப்படுவர்.

வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்குள் நுழையும் முன், மொபைல் போன்களை வைக்க பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள உறைகளில் அதிகபட்சமாக 10 பேர் வரை வைக்கப்படும்.

டோக்கன் கொடுக்கப்படும். ஓட்டளித்த பின் டோக்கனை திருப்பிச் செலுத்தி, மொபைல் போனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, தேர்தல் தாசில்தார் தணிகைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement