கோவை தெற்கில் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 பட்டுவாடா; தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க., வேட்பாளர் புகார்

1


கோவை: கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க.,வினரும், கரூரை சேர்ந்தவர்களும் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வீதம் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் நேற்று புகார் அளித்தார்.


கோவை மாவட்டத்தில் தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில், ஒரு வாக்காளருக்கு ரூ.2,000 வீதமும், கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் ரூ.1,500 வீதமும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடும் தெற்கு தொகுதியில், ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வீதம் வழங்கப்படுகிறது. பூத் வாரியாக வாக்காளர் பட்டிலை சரிபார்த்து கட்சியினர் வழங்குகின்றனர். ஒரு வீட்டில் 4 ஓட்டு இருந்தால், ரூ.20 ஆயிரம் கொடுக்கப்படுகிறது.


இவ்வாறு 8 இடங்களில் பணம் வழங்கியதை அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சி.எஸ்.ஆர்., மட்டும் பதியப்பட்டது; வழக்கு போடவில்லை, கோவை வ.உ.சி., வீதியில் ஒருவர் பூத் சிலிப் மற்றும் பணத்துடன் சுற்றியிருக்கிறார்.


பறக்கும் படையினர் விசாரித்தபோது, கரூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பல இடங்களில் பட்டுவாடா செய்தவர்கள் தப்பி விட்டனர். இதுதொடர்பாக, அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமாரை நேற்று சந்தித்துமனு கொடுத்தார்.


அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூரில் இருந்து ரவுடிகளை வரவழைத்து, கோவை தெற்கு தொகுதியில் 19ம் தேதி இரவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கரூரில் இருந்து 2,000 பேர் வந்திருக்கின்றனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுகிறது. புலியகுளம், 80 அடி ரோடு, ராமநாதபுரம், செட்டி வீதி, அசோக் நகர், ம.ந.க., வீதி, காந்திபுரம் 5வது வீதி எக்ஸ்டன்சன் ஆகிய இடங்களில் கரூரை சேர்ந்தவர்கள் பணம் பட்டுவாடா செய்தனர். அவர்களை பிடித்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தோம்.

தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கச் சொல்லி, ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் கொடுத்திருக்கின்றனர். பரிசு பொருட்கள் இனி கொடுக்கப் போவதாக சொல்கிறார்கள். ராமநாதபுரம் பெரியார் நகரில் இன்று (நேற்று) பட்டப்பகலில் ஒரு பெண் கவுன்சிலர் வீட்டில் பட்டுவாடா நடந்தது; காலை 8.05க்கு பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; 11:05க்கு வருகிறார்கள். அங்கு பணமே இல்லை என்கிறார்கள்.

அதற்குள் அங்கிருந்தவர்கள் தப்பி விட்டனர். ம.ந.க., வீதியில் பணம் கொடுத்த 8 பேரை பிடித்தோம். 5 பேர் போலீஸ் வேனில் அமர வைத்திருந்தனர். பணத்துடன் இருந்த 3 பேரை விரட்டி விட்டு விட்டனர். தி.மு.க., கைப்பாவையாக போலீஸ் இருக்கிறது. அதனால், துணை ராணுவப்படை பாதுகாப்புடன் தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.



@block_G@

'ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற வாய்ப்பு'

அம்மன் அர்ஜுனன் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை தெற்கு தொகுதியில், கரூரை சேர்ந்த ரவுடி கும்பல் துணையுடன் வீடு வீடாகச் சென்று தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க கோரி, பணம் கொடுக்கின்றனர். தடுக்கச் சென்ற அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.


தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆதரவுடன் பணம் பட்டுவாடா செய்யும் கரூரை சேர்ந்தவர்களை கோவை மாவட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே தெற்கு தொகுதியில் நியாயமான முறையில், அமைதியாக, வெளிப்படை தன்மையுடன் தேர்தலை நடத்த முடியும். ஓட்டுப்பதிவு நாளன்று தி.மு.க.,வினர் மற்றும் கரூர்காரர்களால் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவது மற்றும் முறைகேடு நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது.


அனைத்து ஓட்டுச்சாவடியிலும் துணை ராணுவ படையை பாதுகாப்புக்கு நிறுத்தி, ஜனநாயக முறைப்படி, தேர்தலை சுமுகமாக நடத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.block_G

Advertisement