சொத்துக்கணக்கை விஜய் மறைத்தது முறைகேடானது: வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

26


சென்னை: விஜய் தனது சொத்துக்கணக்கில் ரூ.100 கோடி அளவுக்கு மறைத்தது முறைகேடானது என கருத்து தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட், இந்த மனு குறித்து பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.


இந்நிலையில் இரு தொகுதிகளில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்று உள்ளன; பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் சொத்து மதிப்பு 115 கோடி ரூபாய் என குறிப்பிட்ட விஜய், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பு மனுவில், 220 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். எனவே, விஜய் தெரிவித்து உள்ள சொத்து விபரங்கள் முழுமையானவையா; உண்மையானவையா என, வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரி, பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், ஒரு தொகுதியில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை காட்டிவிட்டு, மற்றொரு தொகுதியில் மறைத்தது சட்டவிரோதமானது. முறைகேடானது. ரூ.100 கோடியை மறைத்தது முறைகேடானது என தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து விசாரணை நடத்தவும், பதில் மனு தாக்கல் செய்யவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement