போலி சான்றிதழ் கொடுத்த தலைமையாசிரியரும் கைது

1

குருகிராம்:குருகிராமில், சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கலாம் என கூறி, மாணவர்களை சேர்த்து, மோசடியாக சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளியின் தலைவர் ஒரு மாதத்திற்கு முன் கைதான நிலையில், அந்த பள்ளியின் முதல்வரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குருகிராமின் செக்டார் 9 பி யில், 'எஜுகிரஸ்ட் இன்டர்நேஷனல்' பள்ளி செயல்படுகிறது. அந்த பள்ளிக்கு, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க, சி.பி.எஸ்.இ.,யில் அனுமதி பெற்றிருந்தது.

ஆனால், பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலலாம் என தவறாக கூறி, மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கியது. அதை சரி பார்க்காமல், அந்த பள்ளியில் சேர்ந்த மாணவர்களில், மாணவி ஒருவர் அளித்த புகாரின் படி, விசாரணை நடத்திய போலீசார், கடந்த மாதம், அந்த பள்ளியின் தலைவர் வினய் கட்டாரியா என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவரின் மோசடிக்கு உறுதுணையாக இருந்ததாக, அந்த சர்வதேச பள்ளியின் முதல்வர் ரித்திமா கட்டாரியா என்ற பெண்ணை, குஜராத்தில் உள்ள அவரின் வீட்டில் போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான அந்த தலைமையாசிரியையிடம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தேர்வு எழுத சென்ற தன் மகளை அதிகாரிகள் அனுமதிக்காததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், விசாரணை நடத்திய போலீசார், அந்த பள்ளிக்கு உரிய சி.பி.எஸ்.இ., சான்று இல்லாமல், அனுமதி அளித்துள்ளதை கண்டுபிடித்தனர்.

Advertisement