தொழிலதிபர் வீட்டில் புகுந்து துணிகர கொள்ளை: சொகுசு வாகனத்தில் தப்பிய கும்பலுக்கு வலை

புதுடில்லி:தொழிலதிபர் வீட்டில் நுழைந்து, அங்கிருந்தவர்களை கட்டி போட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

டில்லியில், வசதியானவர்கள் மட்டுமே வாழும் பகுதியான கோல்ப் லிங்க்ஸ் என்ற இடத்தில், தன் மாடி வீட்டில் வசித்து வருபவர் தொழிலதிபர் அசோக் சாவ்லா. அவர் மனைவி, மகன், மருமகளுடன் அந்த பங்களா வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் அவரின் வீடு உள்ளே நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்தவர்களை கயிற்றால் கட்டி போட்டது. வீட்டின் அலமாரிகளை உடைத்து, அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றது.

அப்போது, சில அலமாரிகளை உடைக்க முடியாததால், அந்த அலமாரிகளின் சாவியை கேட்டு, தொழிலதிபர் அசோக் சாவ்லாவின் மனைவியை அந்த கும்பல் தாக்கியது. அடி தாங்க முடியாததால், அலமாரிகளின் சாவிகளை அந்த கும்பலிடம் அசோக் சாவ்லாவின் மனைவி கொடுத்தார்.

அதையடுத்து, அந்த வீட்டிலிருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்துடன் அந்த கும்பல் தப்பியது. தப்பியோடும் முன், அந்த பகுதியில் நிறுத்தியிருந்த சொகுசு வாகனம் ஒன்றில் ஏறி, தப்பியதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீசில் கூறினர்.

அதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த சொகுசு காரின் நம்பர் பிளேட், திருத்தி எழுதப்பட்டது என்பதை அறிந்து, அதன் உண்மையான எண்ணை வைத்து, தேடி வருகின்றனர்.

உணவு டெலிவரி ஏஜன்ட் போல உடையணிந்த ஒருவர் தான் வீட்டில் முதலில் நுழைந்துள்ளார். அவர் உள்ளே நுழைந்ததும், பிற கொள்ளையர்கள் நுழைந்து, வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு, பணம், நகைகளை கொள்ளையடித்து தப்பினர் என்பது தெரிய வருகிறது.

மேலும், ஆறு பேர் கொண்ட கும்பல், அந்த வீட்டின் உள்ளே நுழைய சுஷில் என்ற வேலைக்காரர் உதவியதை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த வீட்டில் புகுந்து, கொள்ளையடித்த கும்பல் தப்பியோடும் போது, சுஷிலும் தப்பியோடியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது, அந்த நபர் தலைமையிலான கும்பல் தான், இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது என்பது தெரிய வருகிறது.

மேலும், அவருக்கு தான், அந்த வீட்டில் இரண்டு வாயில்கள் இருப்பதும், மூடப்பட்டிருந்த கதவை திறந்து, அந்த கொள்ளை கும்பல் தப்பியதும், போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

தொழிலதிபர் வீட்டிற்குள் கொள்ளையர்கள் நுழைந்த போது, மூல்சந்த் என்ற அந்த தொழிலதிபரின் மகன், பக்கத்தில் தான் இருந்துள்ளார். கொள்ளையர்களால் கட்டி போடப்பட்டவர்களின் கட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார்.

மேலும், அந்த கும்பல், அந்த பகுதியில் உள்ள அசோக் சாவ்லாவின் வீட்டிற்குள் நுழையும் முன், பல முறை, நோட்டம் விட்டுள்ளதும் சி.சி.டி.வி., கேமரா காட்சிகளில் தெரிய வந்துள்ளது.

Advertisement