ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

கள்ளக்குறிச்சி: ஆலத்துார் ஏரியில் தண்ணீரில் மூழ்கி 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த ச.செல்லம்பட்டை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜெயசீலன், 9; நான்காம் வகுப்பு மாணவர். ஜெயசீலன், அவரது சகோதரர் குணசீலன், உறவினர் மகன் தயாநிதி ஆகிய மூன்று சிறுவர்களும் நேற்று முன்தினம் மதியம் ஆலத்துார் ஏரியில் குளித்துவிட்டு, அங்கேயே விளையாடினர்.

கால் முழுவதும் பரவிய சேற்றினை கழுவி சுத்தம் செய்ய மீண்டும் ஏரிக்கு சென்ற ஜெயசீலன் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கினார். இதைப்பார்த்த மற்ற இருவரும் சத்தமிட்டனர். உடன், அவ்வழியாக வந்த சக்திவேல், செல்வம் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கிய ஜெயசீலனை மீட்டு சிகிச்சைக்காக ஆலத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஜெயசீலன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement