தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு :மாவட்ட ஹிந்து முன்னணி தீர்மானம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி நிர்வாக குழு கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தியாகதுருகம் முருகன் கோவிலில் நடந்த ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாக குழு கூட்டத்திற்கு, மாவட்ட பொது செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், செயலாளர் முத்துராமன், மண்டல் பொருப்பாளர் நீலகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ், மகேந்திரன், மண்டல் ஒருங்கிணைப்பாளர் சாமிதுரை முன்னிலை வகித்தனர்.

ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் மணலி மனோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஹிந்து விரோத தி.மு.க., கூட்டணியை அகற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க அறிவுறுத்தினார்.

வீடு வீடாக சென்று கடந்த 5 ஆண்டு ஹிந்து மக்களுக்கு தி.மு.க., செய்த அநீதிகளை எடுத்து கூறி தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு ஆதரவு அளிக்கும் வேட்பாளர்களை மட்டுமே வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அ.தி.மு.க., நகர செயலாளர் ஷ்யாம்சுந்தர், வேல்நம்பி உடனிருந்தனர்.

தொடர்ந்து தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நடந்த தெருமுனை பிரசாராத்தில் ஹிந்து மத கோவில்களை இடித்த அரசியல் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு அளிக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஹிந்து வியாபாரிகள் நல சங்க மண்டல் ஒருங்கிணைப்பாளர் ராமு நன்றி கூறினார்.

Advertisement