'அறிவை பட்டை தீட்டும் பட்டறையாக உருவெடுக்கும்' கடல் தாமரை புத்தக பூங்கா குறித்து சாந்தி புகழாரம்

பெங்களூரு: 'வாசகர்கள் அறிவை பட்டை தீட்டும் பட்டறையாக உருவெடுக்கும்' என்று, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, தினமலர் வாசகி சாந்தி புகழாரம் சூட்டினார்.

பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் ரோடு தினமலர் அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, ஜே.பி.நகர் எம்.எஸ்.ராமையா சிட்டியில் வசிக்கும் சாந்தி, தனது மகன் ஈஸ்வர், மகள் துர்கா ஆகியோருடன் வந்தார். சிறு குழந்தைகளை கவரும் ஏராளமான புத்தகங்களை நுாலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர். நுாலகத்தில் இருந்த புத்தகங்களை ஆர்வமாக பார்த்தனர்.

சாந்தி கூறியதாவது:

நான் தினமலரின் 20 ஆண்டு கால வாசகி. இந்த நுாலகத்திற்கு வந்தது ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சி. அதிலும் மகன், மகளுடன் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. எனக்கு புத்தகம் படிக்கிறது ரொம்ப பிடிக்கும். கண்ணதாசன், சிவசங்கரி எழுதிய புத்தகங்களை விரும்பி படிப்பேன். சமீபகாலமாக ராஜேஷ் குமாரின் கிரைம் நாவல்கள் விரும்பி படிக்கிறேன். இந்த நுாலகத்தில் ராஜேஷ் குமார் புத்தகங்கள் நிறைய உள்ளது.

எனது மகன், மகளுக்கு ஆங்கில புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். வீட்டில் 200 க்கும் மேற்பட்ட ஆங்கில புத்தகங்கள் உள்ளது. நேரம் கிடைக்கும் போது இரண்டு பேரும் படிக்கின்றனர். இங்கேயும் வந்து சில புத்தகங்களை ஆர்வமாக பார்த்து உள்ளனர். இனி அடிக்கடி இங்கு வந்து புத்தகங்கள் கண்டிப்பாக படிப்போம். தமிழர்கள் அறிவு பசியை போக்கவே, இந்த நுாலகத்தை ஆரம்பித்து உள்ளீர்கள்.

நுாலகம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள். வாசகர்கள் அறிவை பட்டை தீட்டும் பட்டறையாக இந்த நுாலகம் உருவெடுக்கும். இதில் துளியும் சந்தேகம் இல்லை. நுாலகத்தை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தினால் கூட நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement