கார்த்தி எம்.பி., அலுவலகத்தில் ரூ.13.40 லட்சம் பறிமுதல்: அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பறித்து ஓட்டம்

6

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்., எம்.பி., கார்த்தி அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.13.40 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த இருவர் அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் காங்., எம்.பி., கார்த்தி அலுவலகம் உள்ளது. இங்கு பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி தர்மலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கிருந்த ரூ.13.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அங்கு சென்ற காங்., தொண்டர்கள் பணத்தை எண்ணி பார்த்து எவ்வளவு இருக்கிறது என்று சொல்லுங்கள் என சுற்றி வளைத்தனர். தேர்தல் அதிகாரி பணப்பையை எடுத்தபோது திடீரென்று இருவர் பணத்தை பறித்துக் கொண்டு டூவீலரில் தப்பினர்.

அவர்களை பிடிப்பதற்காக அதிகாரிகள் தங்கள் காரை எடுக்க முயன்ற போது, அங்கிருந்த சிலர் காரின் சாவியையும் பறித்து கொண்டனர். இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், ஏ.எஸ்.பி., ஆஷிஸ் புனியாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீசார் வீடியோவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். காங்., நிர்வாகி பழனியப்பனிடம் பணத்துடன் தப்பியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement