மணலியில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மண்டலம்: அ.தி.மு.க., வேட்பாளர் கே.குப்பன் வாக்குறுதி

திருவொற்றியூர்:''மணலியில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் கே.குப்பன் பேசினார்.

மணலி பிரசார பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் குப்பன் பேசியதாவது:

மணலியில், 50 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த வீட்டு மனை பட்டாவை பெற்றுக் கொடுத்துள்ளேன். விடுபட்டுள்ள பெரியதோப்பு, எடப்பாளையம், தில்லைபுரம், ஹரிகிருஷ்ணபுரம், முனுசாமி தெரு, கிராம தெரு ஆகிய பகுதிகளுக்கு, நிச்சயம் பட்டா பெற்றுக் கொடுப்பேன்.

ஆமுல்லைவாயல், 1 - 2, வைக்காடு பகுதி மக்களின் இடம், சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு வழங்கி உள்ளனர். அந்த நிலத்திற்கு பட்டா இல்லை. சி.பி.சி.எல்., நகர் என்று பெயர் வைத்துள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் மீண்டும், ஆமுல்லைவாயல், 1 ம் பகுதி, 2 ம் பகுதி, வைக்காடு என பெயர் சூட்டப்படும். மணலியில் கிரிக்கெட், கால்பந்து, கைப் பந்து அரங்கம் கூடிய, நவீன ஸ்டேடியம் கட்டி தருவேன்.

தவிர, 44 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம், 22 கோடி செலவில், குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியம், இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. நான் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றதும் நிச்சயம் செய்வேன். ஓட்டளித்த மணலி மக்களுக்கு விசுவாசமாக இருப்பேன்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் துாசியால் ஏற்படும் பாதிப்பை கண்காணிக்க, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மண்டலம் அமைக்கப்படும். மெட்ரோ ரயில் மணலி வரை இயக்க வைப்பேன்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பிரசாரத்தில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தொகுதி பொறுப்பாளர் சுபா, பகுதி செயலர் சாரதி பார்த்திபன், கவுன்சிலர்கள் கார்த்திக், ராஜேஷ் சேகர், ஸ்ரீதரன், வட்ட செயலர்கள் ஜோசப், பிரகாஷ், பட்டாபிராமன், சாக்ரடீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

**

Advertisement